புதுவையில் மாட்டிறைச்சிக்கு தடை இல்லை... முதல்வர் நாராயணசாமி அதிரடி
புதுவை யூனியன் பிரதேசத்தில் பலதரப்பட்ட மக்கள் வசித்து வருவதால் இங்கு மாட்டிறைச்சி தடை இல்லை என்று புதுவை முதல்வர் நாராயணசாமி அதிரடியாக அறிவித்துள்ளார்.
புதுவை: புதுவையில் அனைத்து கலாசாரத்தினரும் வசித்து வருவதால் மாட்டிறைச்சிக்கான தடை விதிப்பது முடியாத காரியம் என்று புதுவை முதல்வர் நாராயணசாமி அதிரடியாக அறிவித்துள்ளார்.
எருமை மாடு, பசு மாடு, காளை மற்றும் ஒட்டகம் ஆகியவற்றை இறைச்சிக்காக பயன்படுத்த மத்திய அரசு கடந்த வெள்ளிக்கிழமை தடை விதித்துள்ளது. விவசாய பணிகளுக்காக மட்டும் விவசாயிகள் சந்தைகளில் மாடுகளை விற்க மத்திய அரசு அனுமதி தந்துள்ளது. மத நம்பிக்கைகளுக்காக மாடுகளை பயன்படுத்தவும் தடை விதித்துள்ளது.
இதற்கு தமிழகம் முழுவதும் எதிர்ப்பலைகள் கிளம்பியுள்ளன. பல்வேறு கட்சித் தலைவர்களும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பால் கறக்க முடியாத நிலையில் உள்ள மாடுகளுக்கு தீவனம் போட முடியாத நிலை உள்ளதால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கேரளம் உள்பட...
இந்நிலையில் கேரளம், புதுவை உள்பட 4 மாநிலங்கள் மத்திய அரசின் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் சென்னை-மாமல்லபுரம்-புதுச்சேரி-கடலூர் புதிய ரயில் பாதை திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதி அளித்தது குறித்து சட்டசபையில் முதல்வர் நாராயணசாமி கருத்து தெரிவித்தார்.

சட்டசபையில் பேச்சு
அப்போது அவர் பேசுகையில் சென்னை-மாமல்லபுரம்-புதுச்சேரி-கடலூர் புதிய ரயில் பாதை திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. மேலும் புதிய ரயில் பாதை திட்டம் தமிழக அரசுடன் இணைந்து நிறைவேற்றப்படும்.

தனி மனித சுதந்திரம்
தாழ்த்தப்பட்ட, பிறப்படுத்தப்பட்ட, அடித்தட்டு மக்கள் இந்த மாட்டிறைச்சியை உண்ணுகின்றனர். மக்கள் உண்ணும் உணவு, உடுத்தும் உடை ஆகியவற்றில் மத்திய அரசு தலையிடுவது தனி மனித சுதந்திரத்தை பறிப்பது போன்றதாகும். அரசியலமைப்புக்கு எதிரானது.

மாட்டிறைச்சிக்கு தடை இல்லை
புதுவையை பொருத்தமட்டில் மாட்டிறைச்சிக்கு தடை விதிக்கும் மத்திய அரசின் சட்டத்தை அமல்படுத்த முடியாது. ஏனெனில் இங்கு அனைத்து தரப்பு மக்களும் வசித்து வருகின்றனர். அவர்கள் அனைத்து கலாசார மக்களும் வசித்து வரும் நிலையில் மாட்டிறைச்சிக்கான தடையை அமல்படுத்த முடியாது.

கடிதம் எழுதுவோம்
இந்த சட்டத்தை திரும்ப பெறக் கோரி மத்திய அரசுக்கு கடிதம் எழுதவுள்ளோம். அவ்வாறு திரும்ப பெறாமல் திணிக்கும் பட்சத்தில் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றுவோம் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications