பிரேமலதா பதிலுக்கெல்லாம் கருத்து சொல்ல முடியாது ... ஜி. ராமகிருஷ்ணன் சுளீர்
மக்கள் நலக் கூட்டணியை மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்று கூறிய பிரேமலதா கருத்திற்கு பதில் சொல்ல விரும்பமில்லை என்று சிபிஎம் மாநில செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் கூறினார்.
சென்னை: பிரேமலதா பதிலுக்கெல்லாம் கருத்து சொல்ல முடியாது என்று சிபிஎம் மாநில செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.
தனியார் தொலைக்காட்சி ஒன்றில் பிரேமலதா விஜயகாந்த் பேசும் போது, மக்கள் நலக் கூட்டணியை மக்கள் புறக்கணித்துவிட்டார்கள் என்றும், அதனை ஏற்க மக்களுக்கு விரும்பம் இல்லை என்றும் கூறியிருந்தார். மேலும், திமுக அதிமுகவிற்கு மாற்றாக கம்யூனிஸ்டுகளை சொல்ல முடியுமா அல்லது பாமகவை சொல்ல முடியுமா? என்றும் பிரேமலதா கேள்வி எழுப்பினார்.
இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி. ராமகிருஷ்ணனிடம் ஒன்இந்தியா கேள்வி எழுப்பியது. அதற்கு "பிரேமலதா சொல்லும் கருத்திற்கெல்லாம் பதில் சொல்ல முடியாது" என்று ஜி. ராமகிருஷ்ணன் பதில் அளித்தார்.
இதே போன்று, பிரேமலதாவின் கருத்து குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசனிடமும் ஒன்இந்தியா கேள்வி எழுப்பியது. அதற்கு பிரேமலதா நேர்காணலை பார்க்காததால் பதில் சொல்ல விரும்பவில்லை என்று முத்தரசன் தெரிவித்தார்.