சபாநாயகர் தனபாலுக்கு எதிரான திமுக தீர்மானம் தோல்வி! ஓ.பி.எஸ் அணியும் கைவிட்டது
சபாநாயகர் தனபால் மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் முன்மொழிந்த நிலையில், அது தோல்வியில் முடிவடைந்தது.
சென்னை: சபாநாயகர் மீது திமுக கொண்டுவந்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது இன்று நடைபெற்ற குரல் வாக்கெடுப்பு தோல்வியடைந்தது. இதையடுத்து எண்ணி கணிக்கும் முறையிலும் தோல்வியே மிஞ்சியது.
எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசின் ஆதரவை நிரூபிக்க கடந்த மாதம் தமிழக சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அப்போது எதிர்க்கட்சிகள் ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்தன. ஆனால் சபாநாயகர் இதனை ஏற்க மறுத்தார்.

இதனால் சட்டசபையில் பெரும் அமளிதுமளி ஏற்பட்டது.நாற்காலிகள் மேசைகள் தூக்கி வீசப்பட்டன. சட்டைக் கிழிப்பு சம்பவங்களும் அரங்கேறின.
இதையடுத்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் குண்டுக்கட்டாக வெளியேற்றப்பட்டனர். எதிர்க்கட்சியினர் இல்லாமலே நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. நம்பிக்கையில்லா தீர்மானம் நம்பிக்கையில்லா தீர்மானம் இதையடுத்து எதிர்க்கட்சித் தலைவரான ஸ்டாலின் சபாநாயகர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவந்தார்.
இதுகுறித்த கடிதம் கடந்த பிப்ரவரி 21ம் தேதி சட்டசபை செயலாளரிடம் வழங்கப்பட்டது. கடிதம் அளித்த 15 நாட்களுக்குள் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடத்தியாக வேண்டும். இந்நிலையில் இன்று, சபாநாயகர் தனபால் மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது குரல் வாக்கெடுப்பு நடத்தப்படும் என அறிவிக்கப்படது.
சபாநாயகர் தனபாலை அப்பதவியிலிருந்து நீக்ககோரும், தீர்மானத்தை மு.க.ஸ்டாலின் முன்மொழிந்தார். இதையடுத்து சபாநாயகரை ஏன் நீக்க வேண்டும் என்பது குறித்து ஸ்டாலின் பேசினார். எதிர்க்கட்சி தலைவர்கள் அடுத்தடுத்து பேசினர். இதன்பிறகு குரல் வாக்கெடுப்பு நடைபெற்றது. சபாநாயகர் தனபாலுக்கு பதிலாக சபையை நடத்திய துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் குரல் வாக்கெடுப்பு நடத்தினார்.
தீர்மானத்திற்கு ஆதரவாக உள்ளோர் ஆம் என்க.. என்றும், எதிராக உள்ளோர் இல்லை என்க.. என்றும் அவர் கூறினார். எதிர்க்கட்சியினர் ஆம் என்று கூறினர். ஆளும் கட்சியினர் இல்லை என்றனர். எண்ணிக்கை அடிப்படையில் ஸ்டாலின் கொண்டுவந்த தீர்மானம் தோல்வியடைந்ததாக ஜெயராமன் அறிவித்தார்.
ஆனால், உறுப்பினர்களின் தலைகளை எண்ணி, ரிசல்டை அறிவிக்க வேண்டும் என ஸ்டாலின் கோரிக்கைவிடுத்தார். இதையடுத்து எண்ணி கணிக்கும் முறையில் வாக்கெடுப்பு நடந்தது. முன்னதாக பேரவை கதவுகள் மூடப்பட்டன.
கருணாநிதி அவைக்கு வரவில்லை என்பதால் அவரை தவிர்த்து எதிர்க்கட்சிகளின் 97 உறுப்பினர்கள் தீர்மானத்தை ஆதரித்தனர். அதேநேரம், ஓ.பி.எஸ் அணியிலுள்ள 12 எம்.எல்.ஏக்களும் அவைக்கு வரவில்லை. ஆளும் கட்சியின் 122 எம்.எல்.ஏக்களும், தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்தனர். இதனால் தீர்மானம் எளிதில் தோல்வியடைந்தது.












Click it and Unblock the Notifications