பொறுப்பு முதல்வர் விவகாரம்... ஸ்டாலினுடன் கருத்து வேறுபாடு இல்லை... திருநாவுக்கரசர்
சென்னை: திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலினுடன் எந்த ஒரு கருத்து வேறுபாடு எதுவும் இல்லை என்று தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.
சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகைக்கு சென்று பொறுப்பு கவர்னர் வித்யாசாகர ராவை சந்தித்து பேசிவிட்டு வெளியே வந்த தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் திருநாவுக்கரசர் செய்தியாளர்களிடம் கூறியதாவது.
கவர்னரை நான் மரியாதை நிமித்தமாகவே சந்தித்தேன். நாங்கள் இருவரும் வாஜ்பாய் பிரதமராக இருந்த போது எம்பியாக ஒன்றாக பணியாற்றியவர்கள். அந்த நட்பின் அடிப்படையில் இன்று சந்தித்து பேசினேன். மேலும், காவிரி பிரச்சனையில் வஞ்சிக்கப்படும் தமிழகத்திற்கு உரிய வகையில் காவிரியில் இருந்து நீரைப் பெற்றுத் தருவது குறித்து எடுத்துரைத்தேன்.
தமிழக அரசு நிர்வாகத்தைப் பற்றி எதுவும் ஆளுநரிடம் பேசவில்லை. அதேபோன்று தமிழக முதல்வரின் உடல் நிலை குறித்து எதுவும் பேசவில்லை. அவரது உடல் நிலை குறித்து பேச நாங்கள் இருவரும் மருத்துவர்கள் இல்லை. அதனால் அதைப்பற்றி பேசவில்லை.
பொறுப்பு முதல்வர் குறித்து ஸ்டாலின் கேட்பது அவருடைய கருத்து. தேவையில்லை என்பது என் கருத்து. அதனால் ஸ்டாலினுடன் எந்த கருத்து வேறுபாடும் இல்லை. திமுக காங்கிரஸ் கூட்டணி என்பது தேர்தலுக்கான கூட்டணி மட்டுமே. தவிர, ஒவ்வொருவர் சொல்லும் கருத்துக்கும் கூட்டணி அமைக்க முடியாது. தமிழக முதல்வர் உடல் நிலை இப்படி இருக்கும் போது அமைச்சர்கள் பொறுப்பாக நடந்து கொள்ள வேண்டும். மற்றபடி பொறுப்பு முதல்வர் குறித்து ஆலோசனை சொல்ல நான் விரும்பவில்லை. அதேபோன்று முதல்வரின் உடல்நிலை குறித்து சிபிஐ விசாரணை தேவை என்று கூறுவதும் சரியான கருத்தல்ல. அதனை நான் ஏற்கவில்லை.
நான் காங்கிரஸ் கட்சித் தலைவரானதில் இருந்து அனைத்துக் கட்சித் தலைவர்களையும் சந்தித்து பேசிக் கொண்டிருக்கிறேன். இது எல்லாம் மரியாதை நிமித்தமாகவே நடக்கிறது. இந்தச் சந்திப்புகளின் போது கூட்டணி தொடர்பான பேச்சுக்களை நான் பேசவில்லை என்று திருநாவுக்கரசர் கூறினார்.