முதல்வரின் கண் அசைவுக்கேற்ப சபாநாயகர் செயல்படுவது ஜனநாயகப் படுகொலை: இளங்கோவன் காட்டம்
சென்னை: தமிழக சட்டசபையில் முதல்வரின் கண் அசைவுக்கேற்ப சபாநாயகர் செயல்படுவது ஜனநாயகப் படுகொலையாகும் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மதுரை உட்பட 8 மாவட்ட காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மதுரையில் இன்று நடைபெற்றது. இதில் தமிழக காங்கிரஸ் மேலிட பார்வையாளர் முகுல் வாஸ்னிக், ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு நிர்வாகிகளிடம் கருத்துக்களை கேட்டறிந்தனர்.

இதன்பின்னர் செய்தியாளர்களிடம் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறியதாவது:
நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியில் நிர்வாகிகள் கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் 3-வது நாளாக மதுரையில் இன்று, 8 மாவட்ட நிர்வாகிகளிடம் கருத்துக்களை கேட்டு வருகிறோம்.
நிர்வாகிகள் கூறும் கருத்துக்கள் வருகிற 28-ந் தேதி டெல்லியில் நடைபெறும் கூட்டத்தில், அகில இந்திய தலைவர் சோனியாகாந்தி, துணைத்தலைவர் ராகுல் காந்தி ஆகியோரிடம் தெரிவிக்கப்படும். அதன் அடிப்படையில் தமிழக காங்கிரசில் மாற்றங்கள் கொண்டு வரப்படும்.
தேர்தல் தொடர்பான பணிகளுக்கு பொறுப்பாளர் நியமனம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்தும் ஆலோசிக்கப்படுகிறது.
கடந்த 4 ஆண்டுகளாக தமிழக சட்டசபையில் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு பேசுவதற்கு அனுமதி இல்லை. முதல்வரின் கண் அசைவுக்கு ஏற்ப, சபாநாயகர் செயல்படுவது ஜனநாயக படுகொலைக்கு சமமாகும்.
1967-க்கு பின்பு திராவிட கட்சிகளின் ஆட்சிகளில், சட்டசபையின் செயல்பாடுகள் இப்படித்தான் இருக்கின்றன. எனவே வருகிற சட்டமன்ற தேர்தலில் இவர்களுக்கு மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள்.
இவ்வாறு இளங்கோவன் கூறினார்.












Click it and Unblock the Notifications