சசிகலா முதல்வராவதில் எந்த தடங்கலுமே இல்லை... மீண்டும் பொன்னையன் 'சவுண்டு'
சென்னை: தமிழக முதல்வராக சசிகலா பதவியேற்பதில் எந்த ஒரு தடங்கலுமே இல்லை என அதிமுக மூத்த தலைவர்களில் ஒருவரான பொன்னையன் தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது 'அம்மா நன்றாக இருக்கிறார்... சாப்பிடுகிறார்... நடக்கிறார்' என ஊடகங்களில் அடித்துவிட்டவர் பொன்னையன். ஜெயலலிதா மறைந்த உடனேயே அவரை பெரியம்மா என்றும் சசிகலாவை சின்னம்மா என்றும் அழைத்து அடடே! என ஆச்சரியப்படுத்தியவர் பொன்னையன்.
ஜெயலலிதாவின் அரசியல் வாரிசு சசிகலாதான் என்பதற்காக ஸ்ரீராம் சிட்பண்ட்ஸில் நாமினியாக சசிகலாவை குறிப்பிட்ட ஒரு ஆதாரம் போதும் என அதிர்ச்சியடை வைத்தவரும் பொன்னையன்தான். ஆனால் திடீரென கடந்த சில வாரங்களாக பொன்னையன் பற்றிய எந்த தகவலும் இல்லை.

பொருளாளர் பதவி
இது தொடர்பாக நாம் விசாரித்த போது, அதிமுக பொருளாளர் பதவி கேட்டு பொன்னையன் அடம்பிடித்து வருவதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்திருந்தன. இந்த நிலையில் ஜெயலலிதா மரணத்தில் பல சந்தேகங்களை அதிமுக மூத்த தலைவர்களில் ஒருவரான பிஹெச் பாண்டியன் எழுப்பி செய்தியாளர்களை சந்தித்தார்.

தடங்கலே இல்லை
இச்சந்திப்பு முடிந்த உடனே செய்தி நிறுவனம் ஒன்றுக்கு திடீரென பொன்னையன் பேட்டியளித்தார். அந்த பேட்டியில் பொன்னையன் கூறியதாவது: அதிமுகவில் எந்த ஒரு பிளவும் இல்லை. சசிகலா முதல்வராவதில் எந்த தடங்கலும் இல்லை.

சட்டப்படி தேர்வு
ஆளுநர் நேரம் ஒதுக்கும் போது சசிகலா முதல்வராவார். அதிமுக எம்.எல்.ஏ.க்களால் ஏகமனதாக சட்டப்படி தேர்ந்தெடுக்கப்பட்டவர் சசிகலா.

இணக்கமான சூழல்
மத்திய, மாநில அரசுகளுக்கு இடையே எந்த மோதலும் இல்லை. மத்திய, மாநில அரசுகளுக்கு இடையே இணக்கமான நிலையே நீடிக்கிறது என கூறியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications