ஸ்ரீரங்கம் தொகுதி காலி என்று தகவல் வந்ததும் 6 மாதத்தில் இடைத்தேர்தல்- பிரவீன் குமார்
சென்னை: ஸ்ரீரங்கம் தொகுதி காலியாக உள்ளதாக இதுவரை தேர்தல் ஆணையத்திற்கு முறைப்படி தகவல் வரவில்லை. அப்படி தகவல் வந்ததும் 6 மாதத்தி்ல் இடைத் தேர்தல் நடத்தப்படும் என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீன் குமார் கூறியுள்ளா்.
ஜெயலலிதா சட்டசபை உறுப்பினராக இருந்த தொகுதி ஸ்ரீரங்கம். ஊழல் வழக்கில் அவருக்கு 4 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு கைது செய்யப்பட்டதால் அவரது முதல்வர் பதவியும், எம்எல்ஏ பதவியும் பறி போய் விட்டது. இதையடுத்து ஸ்ரீரங்கம் தொகுதிக்கு இடைத் தேர்தல் நடத்தப்பட வேண்டியுள்ளது.

ஆனால் தொகுதி காலியாக உள்ளதாக சட்டசபை செயலகம்தான் தேர்தல் ஆணையத்திற்குத் தகவல் தெரிவிக்க வேண்டும். ஆனால் இதுவரை அப்படி தகவல் ஏதும் போகவில்லையாம். இது ஏற்கனவே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் இதுகுறித்து பிரவீன் குமாரிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, தொகுதி காலியாக உள்ளதாக தேர்தல் ஆணையத்திற்குத் தகவல் வர வேண்டும். அந்த தகவல் வந்ததும் தேர்தல் ஆணையம் தேதியை அறிவிக்கும். ஸ்ரீரங்கம் தொகுதி காலியாக உள்ளது பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பு தமக்கு வரவில்லை.
எப்போது இடைத்தேர்தல் அறிவித்தாலும் அதனை நடத்த தயாராக இருக்கிறோம். 6 மாதத்திற்குள் இடைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பது விதியாகும்.
வரும் 15-ம் தேதி முதல் அடுத்த மாதம் 10-ம் தேதி வரை தமிழக முழுவதும் வாக்காளர் பட்டியல் திருத்த பணி நடைபெறயுள்ளது. இதுதொடர்பாக விவாதிக்க வரும் 13-ம் தேதி அனைத்து கட்சி கூட்டம் நடத்த இருக்கிறோம் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications