விரலில் வைக்க மை இல்லை.. கியூல நின்னாலும் பணம் இல்லை.. என்ன பண்றதுன்னு புரியல
பழைய ரூபாய் நோட்டுகளை மாற்ற வங்கியில் நீண்ட வரிசையில் நிற்கும் போது விரலில் வைக்கப்படும் மை தீர்ந்துவிட்டதால் பணத்தை மாற்ற முடியாமல் மக்கள் வெறும் கையோடு வீடு திரும்பினர்.
சென்னை: செல்லாத 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்காக வங்கிக்கு சென்று நீண்ட வரிசையில் நின்ற மக்கள் கை விரலில் வைக்கப்படும் அழியாத மை தீர்ந்து விட்டதால் பணத்தை மாற்ற முடியாமல் வெறும் கையோடு வீடு திரும்பினர்.
கடந்த 9ம் தேதியில் இருந்து 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மோடி அரசு அறிவித்தது. இதனைத் தொடர்ந்து பொதுமக்கள் தங்களிடம் உள்ள பழைய ரூபாய் நோட்டுகளை வங்கிகள் மற்றும் அஞ்சலகங்களில் கொடுத்து மாற்றி வருகின்றனர். ஒருவரே மீண்டும் மீண்டும் வங்கிகளுக்கு சென்று பணத்தை மாற்றாமல் இருக்க வேண்டும் என்பதற்காக ஓட்டுப் போடும் போது விரலில் வைக்கப்படும் அழியாத மையை விரலில் வைக்க வேண்டும் என்று புதிய அறிவிப்பை மத்திய அரசு அறிவித்தது.
இதுதொடர்பான அறிவிப்பு வந்த உடன் வங்கிகள் வாடிக்கையாளர்களின் கையில் மை வைக்க தயாரானது. ஆனால் மைதான் வங்கிகளுக்கு வந்து சேரவில்லை. இதனால் வங்கிகள் பழைய நோட்டுக்களை மாற்றுவதை நிறுத்தியது. பணத்தை மாற்ற வங்கிகளுக்கு வரும் மக்களிடம் மை இன்னும் வரவில்லை. அதனால் பணத்தை மாற்ற முடியாது என்று திரும்பி அனுப்பியது.
மை வந்து சேர்ந்த ஒரு சில வங்கிகளில் மட்டும் மை வைக்கப்பட்டு பணம் மாற்றப்பட்டது. அந்த வங்கிகளிலும் குறைவாகவே மை வந்ததால் தொடர்ந்து வாடிக்கையாளர்களுக்கு மை வைத்து பணம் மாற்றத்தை தொடர்ந்து செய்ய முடியாமல் போனது. இதனால் நீண்ட வரிசையில் நின்றவர்கள் பணம் கிடைக்காமல் வெற்றுக் கையோடு வீடு திரும்பினார்கள்.
இதுபோன்ற நேரங்களில் பணத்தை வங்கியில் செலுத்திவிட்டு செல்லுங்கள். பின்னர் எடுத்துக் கொள்ளலாம் என்று பொதுமக்களிடம் வங்கிகள் அறிவுறுத்துகின்றன. என்றாலும் அன்றாட செலவிற்காகத்தான் பணத்தை மாற்ற மக்கள் வங்கிக்கு வருகின்றனர் என்பதால் புலம்பிக் கொண்டே அவர்கள் வீடு திரும்பினர்.