இரட்டை இலை வழக்கில் இன்று தீர்ப்பு வர வாய்ப்பு இல்லை- டிடிவி தினகரன்
இரட்டை இலை சின்னம் யாருக்கு என்ற வழக்கில் இன்று தீர்ப்பு வர வாய்ப்பில்லை என டிடிவி தினகரன் தெரிவித்தார்.
சென்னை: இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பது தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் இன்று நடைபெறும் விசாரணையில் இன்றே தீர்ப்பு வர வாய்ப்பில்லை என்று டிடிவி தினகரன் தெரிவித்தார்.
இரட்டை இலை சின்னம் யாருக்கும் என்பது தொடர்பான இறுதி விசாரணை டெல்லியில் உள்ள தேர்தல் ஆணையத்தில் இன்று நடைபெறுகிறது. இந்நிலையில் இதுகுறித்து டிடிவி தினகரன் சென்னை அடையாறில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறுகையில் இரட்டை இலை சின்னம் எங்களுக்கே கிடைக்கும். பொதுக் குழு உறுப்பினர்களில் பலர் இரு தரப்பு பிரமாணப் பத்திரங்களில் கையெழுத்திட்டுள்ளனர்.
தகிடுதத்தம் செய்து இரட்டை இலையை பெற எடப்பாடி அணியினர் முயற்சிக்கின்றனர். ஓ.பன்னீர் செல்வம்- எடப்பாடி பழனிச்சாமி அணிக்கு இரட்டை இலை சின்னம் கிடைத்தால் அது செத்து விடும்.
நாங்கள் மீண்டும் போராடுவோம். தமிழகத்தில் மிகப் பெரிய அமைப்பை அழித்து விட்டு வளர நினைக்கிறார்கள். இரட்டை இலை சின்னத்தில் இன்றே தீர்ப்பு வர வாய்ப்பில்லை என்று டிடிவி தினகரன் தெரிவித்தார்.