44 மாதமாக ஒரு பிரச்சினையும் இல்லை - ஓ.பன்னீர் செல்வம்
சென்னை: தமிழகத்தில் கடந்த 44 மாதங்களாக எந்த சட்டம் ஒழுங்குப் பிரச்சினையும் இல்லை. தமிழகம் அமைதிப் பூங்காவாக திகழ்கிறது என்று முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.
சட்டசபையில் தேமுதிக உறுப்பினர் எஸ்.ஆர்.பார்த்திபன் சட்டம் ஒழுங்குப் பிரச்சினை குறித்து நேற்று பிரச்சினை எழுப்பினார்.
அதற்கு முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அளித்த பதில்:

அதிமுக கொலை- திமுக கொலை
அரசின் அறிவுரைப்படி மாநிலத்தின் சட்டம்-ஒழுங்கை போலீசார் சீரிய முறையில் பராமரித்து வருவதோடு, குற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கைகளையும் எடுத்து வருகின்றனர். 2005-ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியின் இறுதியில் நடந்த கொலைகளின் எண்ணிக்கை ஆயிரத்து 366. 2010-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சியின் இறுதியில் அதன் எண்ணிக்கை 1,715 ஆக உயர்ந்திருந்தது.

எல்லாக் கொலையும் குறைந்தது
அதுபோல் ஆதாயக் கொலைகள், கூட்டுக் கொள்ளைகள், கன்னக்களவுகள் ஆகியவையும் அ.தி.மு.க. ஆட்சியில் குறைவாகவே இருந்தன. தி.மு.க. ஆட்சியில் கொலை வழக்குகள் 25.5 சதவீதமும், ஆதாயக் கொலைகள் 106.8 சதவீதமும், கூட்டுக் கொள்ளை 16.4 சதவீதமும், கொள்ளைகள் 315.8 சதவீதமும், கன்னக் களவுகள் 26 சதவீதமும் அதிகரித்ததை புள்ளிவிபரங்கள் கூறுகின்றன.

திமுக கொலைதான் அதிகம்
அதாவது தி.மு.க. ஆட்சியில் கொலைகள் மட்டும் ஆண்டொன்றுக்கு சராசரியாக 5.1 சதவீதம் அதிகரித்துள்ளன. ஆனால் கடந்த நான்கு ஆண்டுகளில் இந்த ஆட்சியில் கொலை வழக்குகள் 0.5 சதவீதம் குறைந்து வந்துள்ளன. ஆதாயக் கொலைகளின் எண்ணிக்கையும் ஆண்டொன்றுக்கு இந்த ஆட்சியில் 4.3 சதவீதம் குறைந்து வந்துள்ளன.

நம் குற்றம் குறைவே
தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் அறிக்கைப்படி, தமிழகத்தில் 2012-ம் ஆண்டு தாக்கலான குற்றங்களின் எண்ணிக்கையை மற்ற மாநிலங்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிட்டால், நமது மாநிலம் குறைவாக உள்ளது. 2012-ம் ஆண்டு உத்தரபிரதேசத்தில் கொலைகள் 4,966, பீகாரில் 3,566, ஆந்திராவில் 2,717, மராட்டிய மாநிலத்தில் 2,712, மத்திய பிரதேசத்தில் 2,373, மேற்கு வங்கத்தில் 2,252 கொலை வழக்குகள் தாக்கலாகி உள்ளன.

மீட்பு தீவிரம்
தமிழகத்தில் போலீசார் குற்ற வழக்குகளில் திறமையாக புலன் விசாரணை செய்து, குற்றவாளிகளைக் கைது செய்தும், களவுபோன பொருட்களை மீட்டும் வருகின்றனர். பல்வேறு தடுப்புக் காவல் சட்டங்களின்கீழ் 2010-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சியில் 2 ஆயிரத்து 73 பேர் காவலில் வைக்கப்பட்டனர். இந்த ஆட்சியில் 2012-ம் ஆண்டு 2 ஆயிரத்து 158 பேர், 2013-ம் ஆண்டு 3 ஆயிரத்து 433 பேர், 2014-ம் ஆண்டு 3 ஆயிரத்து 757 பேர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டனர். தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் புள்ளிவிபரப்படி களவுபோன சொத்துக்களை மீட்டதில் இந்திய அளவில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. இதன்படி, கடந்த ஆட்சியைவிட இந்த ஆட்சிக் காலத்தில் குற்றத் தடுப்பு நடவடிக்கைகளை போலீசார் சிறப்பாக மேற்கொண்டு வருவது தெரியும்.

கடும் நடவடிக்கை எடுக்கும் போலீஸ்
ஒவ்வொரு ஆண்டும் மக்கள் தொகை அதிகரிப்பு, வளர்ந்துவரும் பொருளாதாரம், தகவல் தொழில்நுட்ப முன்னேற்றம், மாறி வரும் சமுதாய சூழ்நிலை, நகர் மயமாதல் போன்றவற்றால் குற்ற நிகழ்வுகள் தொடர்ந்து அதிகரிக்கின்றன. ஆனால் நமது மாநிலத்தில் போலீசாரின் கடும் நடவடிக்கைகளால் குற்ற நிகழ்வுகள் குறைந்து வந்துள்ளன. சிறப்பான சட்டம்-ஒழுங்கு பராமரிப்பு என்பது, மாநிலத்தில் சட்டத்தின் ஆட்சி எவ்வாறு நடக்கிறது? தனிமனித பாதுகாப்பு மற்றும் அவர்களின் சொத்துக்கள், உடமைகளின் பாதுகாப்பு எவ்வாறு உள்ளது? என்பதைப் பொறுத்தும், சட்டத்தை அமல்படுத்தும் போலீசாரின் சுதந்திரமான செயல்பாட்டைப் பொறுத்தும் அமையும்.

44 மாதமாக
தமிழக அரசு அவ்வப்போது அளித்துவரும் அறிவுரைகளின் பேரிலும், ஊக்கத்தின் பேரிலும் போலீசார் சிறப்பாக செயல்பட்டு மாநிலத்தின் சட்டம்-ஒழுங்கை பராமரித்து வருகின்றனர். கடந்த 44 மாதங்களாக மக்களைப் பாதிக்கும் சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகள் ஏதுமின்றி தமிழகம் தொடர்ந்து அமைதிப் பூங்கா மாநிலமாக நிலவி வருகிறது என்றார் முதல்வர்.












Click it and Unblock the Notifications