ஆர்.கே.நகரில் இதுவரை பணம் சிக்கவில்லை... சந்தீப் சக்சேனா தகவல்!
சென்னை: ஆர்.கே.நகர் தொகுதியில் இதுவரை பணம் எதுவும் சிக்கவில்லை என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா கூறியுள்ளார்.
சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசினார் சந்தீப் சக்சேனா. அப்போது அவர் கூறியதாவது:

ஆர்.கே.நகர் தொகுதிக்கு இடைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து அதிகாரிகள் யாரையும் டிரான்ஸர் செய்ய முடியாது. சில காவல்துறை அதிகாரிகள் இடமாற்றம் செய்ததாக கூறப்படுகிறது. அப்படி நடந்திருந்தால் அது தவறு, ஏற்க முடியாது. மீண்டும் அவர்கள் பழைய பணி இடத்திற்கு மாற்றப்பட வேண்டும்.
ஆர்.கே.நகர் தொகுதியில் தேர்தல் விதிமுறைகளை மீறி வைக்கப்பட்ட 759 போஸ்டர், பேனர்கள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளன. இவற்றை வைத்தவர்களுக்கு நோட்டீஸ் அளித்து வழக்குப் பதிவு செய்வோம்.
ஆர்.கே.நகர் தொகுதியில் 6 சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு ஒரு நிர்வாக மாஜிஸ்திரேட்டு (தாசில்தார் அந்தஸ்துக்கு குறையாத) அந்தஸ்தில் உள்ள அதிகாரி, போலீஸ் அதிகாரி பணியில் இருப்பார்கள். இதுவரை அங்கு மேற்கொள்ளப்பட்ட சோதனையில் பணம் சிக்கவில்லை.
வாக்காளர்களுக்கு அட்டைகளில் கையெழுத்து போட்டு கொடுத்துவிட்டு, தேர்தல் முடிந்ததும் இலவசமாக பொருட்களை வாங்கிக் கொள்ளலாம் என்று அரசியல் கட்சியினர் வாக்குறுதிகள் கொடுப்பது இப்போதுதான் எனது கவனத்துக்கு கொண்டு வரப்படுகிறது. ஆனால் தேர்தலுக்குப் பிறகு பொருட்களைக் கொடுப்பதை தேர்தல் கமிஷன் தடுக்க முடியாது.
தேர்தல் தொடர்பாக புகார் கூறவேண்டும் என்றால், தலைமை தேர்தல் அதிகாரியின் அலுவலகத்துக்கு 1950 என்ற இலவச எண்ணுக்கு பேசலாம். கட்டுப்பாட்டு அறைகளும் ஏற்படுத்தப்படும்.
ஆர்.கே.நகர் இடைத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை, தேர்தல் நடத்தும் அதிகாரியின் (மாநகராட்சி மண்டல அதிகாரி) அலுவலகத்தில்தான் தாக்கல் செய்ய வேண்டும். அவரது அலுவலகம் தண்டையார்பேட்டையில் உள்ளது. (முதல்வர் ஜெயலலிதாவுக்காக ரிப்பன் மாளிகையில் வேட்பு மனுத் தாக்கல் செய்ய சிறப்பு ஏற்பாடுகள் நடந்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது நினைவிருக்கலாம்). என்றார் அவர்.












Click it and Unblock the Notifications