விஜயகாந்த் வாழ்வில் இனிமேல் வெற்றியே இல்லை: இப்ராஹீம் ராவுத்தர்
கரூர்: இனிமேல் அரசியலில் எப்போதுமே தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெற்றி பெற முடியாது என அவரது முன்னாள் நண்பரும், அதிமுக தலைமை கழக பேச்சாளருமான இப்ராஹீம் ராவுத்தர் தெரிவித்துள்ளார்.
கரூர் அதிமுக வேட்பாளர் தம்பிதுரையை ஆதரித்து கரூர் சின்னப் பள்ளிவாசல் தெருவில் தேர்தல் பிரச்சாரம் நடைபெற்றது. அதில் தேமுதிக தலைவர் விஜயகாந்தின் முன்னாள் நண்பரும், அதிமுக தலைமை கழக பேச்சாளருமான இப்ராஹீம் ராவுத்தர் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் கூறுகையில்,
சினிமா துறையில் துணை நடிகராக இருந்த போதே புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். ஏழைகளுக்கு பல உதவிகளை செய்தார். அதனால் தான் அவரது புகழ் உலகம் முழுக்க பரவியது.
அது மட்டும் அல்ல அடுத்தவருக்கு கொடுத்து உதவ வேண்டும் என்ற பழக்கத்தை ஏற்படுத்தியவரே எம்.ஜி.ஆர். தான். அவர் வழியில் முதல்வர் ஜெயலலிதா சாதாரண தொண்டருக்கும் உயர்ந்த பதவியை கொடுத்து அழகு பார்க்கின்றார். ஆனால் விஜயகாந்த் என்ன செய்கின்றார். அவரை நம்பி வந்த அவரது தொண்டர்களையே அடித்து உதைக்கின்றார். இதுவா மனிதனுக்கு அழகு, ஒரு தலைவருக்கு அழகு.
முதல்வர் ஜெயலலிதா ஆதரவால் தான் விஜயகாந்த் எதிர்க்கட்சி தலைவர் என்ற பதவியை பெற முடிந்தது. இனிமேல் அவரால் அரசியலில் எந்த பதவியும் பிடித்து வெற்றி பெற முடியாது.
இந்தியாவில் உள்ள பெரும்பாலான கட்சி தலைவர்களுக்கு வாரிசு உண்டு. பதவி சுகத்தை அனுபவித்து வருகின்றனர். ஆனால் முதல்வர் ஜெயலலிதாவுக்கு தொண்டர்கள் தான் வாரிசு என்றார்.