நீட் தேவையில்லை... கோவையில் கொந்தளித்த பெற்றோர்கள் மாணவர்கள்!
கோவை: நீட் தேர்வு தேவையில்லை என்றும் மாநில அரசின் மருத்துவக்கலந்தாய்வு கட் ஆப் மதிப்பெண் அடிப்படையில்தான் நடக்கவேண்டும் என்று வலியுறுத்தி, கோவை தெற்கு தாசில்தார் அலுவலகம் முன்பு மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் போராட்டம் நடத்தினர். இதனால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
தமிழக மாணவர்கள் மற்றும் மாணவியருக்கு நீட் தேர்வு என்பதன்மூலம் பெரும் எதிர்கால நெருக்கடியை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது என்று கூறி மாநிலம் முழுக்க ஆங்காங்கே போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், கோவை தெற்கு தாசில்தார் அலுவலகம் முன்பாக பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் சாலையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பப்பட்டன. மத்திய அரசு தமிழகத்துக்கு நிரந்தர விலக்கு அளிக்க வேண்டும். என்றும் போராட்டத்தில் கலந்துகொணடவர்கள் வலியுறுத்தினர்.
பின்னர் இது தொடர்பாக ஊடகங்களுக்கு பேட்டியளித்த பெற்றோர்கள், " 20 நாள் இடைவெளியில் 2 ஆண்டு சிபிஎஸ்இ பாடங்களை படித்துவிட்டு நீட் தேர்வை எழுத மத்திய அரசு தமிழக மாணவர்களுக்கு நெருக்கடி கொடுக்கிறது.
கடந்த 3 மாதங்களாக தமிழர்கள், வீட்டில் நிம்மதி இல்லை. வாழ்க்கையின் கனவான மருத்துவப்படிப்பு நிறைவேறாமல் போய்விட்டதே என்று ஒவ்வொரு பிளஸ் மாணவனும் மாணவியும் உணவில்லாமல் தவித்து வருகிறார்கள். மருத்துவ மாணவர் சேர்க்கை மாநில அரசின் பாடத்திட்டத்தின் அடிப்படையில் கட் ஆப் மதிப்பெண் அடிப்படையில்தான் நடக்கவேண்டும்.
இதெல்லாம் மத்திய அரசுக்கு தெரியாது. அதனால் உடனடியாக நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு நிரந்தர தீர்வு வழங்கவேண்டும். மாநில அரசின் தொடர் வலியுறுத்தலால் தற்காலிக விலக்கு கொடுத்துள்ளது மத்திய அரசு. அதற்காக நன்றி. ஆனால் தேவை நிரந்தர விலக்கு." என்று வலியுறுத்தினர்.