ம.ந.கூ. ஓவர்... உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி அவசியமில்லை: திருமாவளவன்
சென்னை: உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி அமைக்க வேண்டிய அவசியம் இல்லை. இருந்தாலும் ஆறு கட்சி தலைவர்களுடன் பேசி முடிவெடுத்து இதுகுறித்து பின்னர் அறிவிப்போம் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார்.
அரியலூர் அருகேயுள்ள அங்கனூர் கிராமத்தில் வசித்து வரும் தனது தாயை பார்ப்பதற்காக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் நேற்று அரியலூர் வந்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், கல்லூரியில் படிக்கும் தாழ்த்தப்பட்ட மாணவர்களின் கல்வி கட்டணத்தை முழுமையாக ஏற்க வேண்டும் என கூறும் அரசாணை செயல்படுத்தப்படாமல் உள்ளது. இதனை நடைமுறைப்படுத்த, தமிழக அரசு கண்காணிப்பு குழு அமைக்க வேண்டும் என்றார்.
விவசாயிகள் பெற்ற அனைத்து வங்கி கடன்களையும் தமிழக அரசு தள்ளுபடி செய்ய வேண்டும். மாணவர்களின் கல்விக்கடன், மகளிர் சுய உதவிக்குழு கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
அரியலூர் மாவட்டத்தில் பள்ளி நேரங்களில் சிமெண்டு ஆலைக்கு சுண்ணாம்புக்கல் ஏற்றி செல்லும் டிப்பர் லாரிகளை தடை செய்ய வேண்டும். அனைத்து லாரிகளிலும் வேக கட்டுப்பாடு கருவி அமைக்க வேண்டும் என்றும் திருமாவளவன் கூறினார்.

தேர்தல் ஆணையத்திடம் மனு
தேர்தல் நடைபெறும் முறையில் முக்கியமான சில சீர்திருத்தங்கள் கொண்டுவர வேண்டும் என இந்திய தலைமை தேர்தல் அதிகாரியை சந்தித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மனு கொடுக்க உள்ளோம். வீடு,வீடாக சென்று பிரசாரம் செய்வதை தடுக்க வேண்டும், அப்படி செய்தால் பணம் கொடுக்க வாய்ப்பாக அமைகிறது என்றார்.

தேர்தல் செலவு
தேர்தல் நடத்துவதற்கான சட்டதிட்டங்களில் பல சீர்திருத்தங்களை செய்ய வேண்டும். இந்திய தேர்தல் ஆணையம் வேட்பாளர்கள் செலவு செய்யக்கூடிய தொகையை நிர்ணயிக்கக்கூடிய அதே வேளையில் அரசே அந்த செலவை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் கூறினார்.

செலவில் பாதி தொகை
வேட்பாளர்கள் 50 சதவிகிதம், தேர்தல் ஆணையம் 50 சதவிகித தொகை என செலவு தொகையைப் பகிர்ந்து கொள்ள வேண்டும்.
வேட்பாளர்கள் செய்யக்கூடிய செலவை தேர்தல் ஆணையத்திடம் முன்தொகையாக செலுத்த வற்புறுத்த வேண்டும் உள்ளிட்ட சீர்திருத்தங்களை செய்தால் மட்டுமே தேர்தலை நியாயமாக நடத்த முடியும் என்றார் திருமாவளவன்.

மறு வாக்கு எண்ணிக்கை
காட்டுமன்னார்கோவில் தொகுதி வாக்கு எண்ணிக்கையில் தற்போதுள்ள ஆளுங்கட்சிக்குச் சாதகமாக அதிகாரிகள் நடந்துக் கொண்டுள்ளனர் என மக்களே உணர்ந்திருக்கிறார்கள். எனவே மறுவாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க உள்ளதாகவும் திருமாவளவன் கூறினார்.

உள்ளாட்சி தேர்தல்
தமிழக அரசும் எதிர்க்கட்சியும் இணக்கமாக செயல்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது. இதற்கு மக்கள் நலக் கூட்டணியும் ஒரு காரணம். உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி அமைக்க வேண்டிய அவசியம் இல்லை. இருந்தாலும் ஆறு கட்சி தலைவர்களுடன் பேசி முடிவெடுத்து இதுகுறித்து பின்னர் அறிவிப்போம் என்றும் திருமாவளவன் தெரிவித்தார்.

கட்சிக்குள் கருத்து
மக்கள் நலக் கூட்டணியால் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பெரிய பலனில்லை. குறிப்பாக வாங்கிய வாக்குகள் அனைத்தும் சொந்த வாக்கு பலத்தில் மட்டுமே. தலித் ஒருவர் முதல்வர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்ற கருத்து பரவலாக எழுந்தபோது அதை கூட்டணி கட்சியினர் ஏற்கவில்லை என்பது விசிகவினரின் கருத்தாகும்.

கௌரவ தோல்வி
விஜயகாந்த் கூட்டணியில் இணைந்தவுடன் அவரை முதல்வராக அறிவித்தனர். ஆனால், அவர் தேர்தலில் டெபாசிட் இழந்தார். அதேநேரம் திருமாவளவன் 87 வாக்குகளில்தான் தோல்வியை தழுவினார்.

திருமாவின் பேச்சு
நம்மால்தான் மக்கள் நலக் கூட்டணிக்கு பலன். அவர்களால் நமக்கில்லை என்ற கருத்துக்கள் விசிக நிர்வாகிகள் மட்டத்தில் பேசப்படுகிறது. இதனை திருமாவளவனிடம் நிர்வாகிகள் கூறியுள்ளனர். எனவேதான் உள்ளாட்சி தேர்தலுக்கு கூட்டணி அவசியமில்லை என்ற கருத்தை வெளிபடுத்தியுள்ளார் திருமாவளவன் என்றும் பேசப்படுகிறது. மக்கள் நலக்கூட்டணி உருவாக காரணமாக இருந்த திருமாவளவனே இந்த கூட்டணி பிரியவும் காரணமாகிவிடுவாரோ என்ற கருத்து பரவலாக எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications