'அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு தமிழகத்தில் புதிய மதுக்கடைகள் திறக்கப்படாது '
இன்றைய நாளிதழ்களில் வெளியான சில முக்கியச் செய்திகள் சிலவற்றைத் தொகுத்தளிக்கிறோம்.
தி இந்து (ஆங்கிலம்): புதிய மதுக்கடைகள் திறக்கப்படாது
அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு தமிழகத்தில் புதிய மதுக்கடைகள் திறக்கப்படாது என்று அமைச்சர் கே. பாண்டியராஜன் கூறியதாக தி இந்து நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
மதுவுக்கு அடிமையானவர்களை அதிலிருந்து விடுவிப்பது பெரிய பிரச்சனையாக கருதப்படுவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அனைத்து ஆரம்ப சுகாதார மையங்களிலும் உளவியல் நிபுணர்களை கொண்டிருக்க வேண்டும் என்று அரசு கொள்கை முடிவு எடுத்திருப்பதாக அவர் கூறியுள்ளதாக மேலும் அச்செய்தி விவரிக்கிறது.
தினமணி: 'பணமதிப்பிழப்பு நடவடிக்கை திட்டமிட்ட ஊழல்'
பிரதமர் நரேந்திர மோதிக்கு நெருக்கமான தொழில்பர்களுக்கு உதவும் நோக்கத்திலேயே, உயர் மதிப்பு ரூபாய் நோட்டுகளை திரும்பப்பெறும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளதாக தினமணி நாளிதழ் பிரதான செய்தி வெளியிட்டுள்ளது.
இது ஒரு திட்டமிடப்பட்ட ஊழல் என்றும் அவர் சாடியுள்ளார். திட்டமிடப்பட்ட திணிப்பாக அமைந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கை தோல்வியடைந்தது குறித்து நாட்டு மக்களுக்கு பிரதமர் மோதி பதிலளிக்க வேண்டும் என்றும் ராகுல்காந்தி வலியுறுத்தியுள்ளதாக அந்நாளிதழ் செய்தி விவரிக்கிறது.
தினமலர் வெளியிட்டுள்ள கார்டூன்
தினதந்தி: 7வது மாடியில் இருந்து தவறி விழுந்த குழந்தை
சென்னை நுங்கம்பாக்கம் சூளைமேட்டில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் ஏழாவது மாடியில் இருந்து கீழே விழுந்த 4 வயது சிறுமி உயிரிழந்ததாக தினத்தந்தி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
அங்கு வசித்து வந்த கீதா, தன்னுடைய 4 வயது மகளான சாரதாவை படுக்கை அறையில் தூங்க வைத்துவிட்டு மற்றொரு கைக்குழந்தையுடன் அருகில் உள்ள நண்பர் வீட்டுக்கு சென்றதாக கூறப்படுகிறது. தூங்கிக்கொண்டு இருந்த சிறுமி சாரதா திடீரென்று விழித்து பார்த்தபோது, அருகில் தாய் இல்லாதை அறிந்து அழுதுகொண்டே 7-வது தளத்தின் பால்கனிக்கு வந்தபோது அங்கிருந்து தவறி விழுந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக சூளைமேடு போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாக அந்நாளிதழ் செய்தி மேலும் விவரிக்கிறது.
பிற செய்திகள்:
- பூகம்பத்தை முன்கூட்டியே கண்டறியும் தொழில்நுட்பம்: விஞ்ஞானிகள் முயற்சி
- இலங்கை: 13 ஆண்டுகளாக காணாமல் போன மகனை தேடிக் கொண்டிருக்கும் தாய்
- ரோஹிஞ்சா பிரச்சனை: 'ஆங் சான் சூச்சி பதவி விலகியிருக்க வேண்டும்'
- பணமதிப்பு நீக்கம்: சாமானிய மனிதன் பெற்ற பலன் என்ன?