உள்ளாட்சி இடைத் தேர்தல் ஏற்பாடுகள் தயார்: நோட்டாவுக்குப் பதில் "கவுண்டமணி"!
சென்னை: உள்ளாட்சி இடைத்தேர்தல் ஓட்டுப்பதிவிற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன. இந்தத் தேர்தலில் நோட்டாவுக்குப் பதில் 49 ஓ படிவம் வழங்கப் படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
கோவை, தூத்துக்குடி மாநகராட்சி மேயர்கள், 4 நகராட்சி தலைவர்கள், 6 பேரூராட்சி தலைவர்கள், 8 மாநகராட்சி வார்டு கவுன்சிலர்கள், 23 நகராட்சி வார்டு உறுப்பினர்கள், 39 பேரூராட்சி உறுப்பினர்கள் உள்பட காலியாக உள்ள 530 உள்ளாட்சி பதவிகளுக்கு நாளை இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயாராக உள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. பூத் சிலிப்புகள் வழக்கும் பணி முடிவடைந்து விட்டது. பூத் சிலிப் கிடைக்கப் பெறாதவர்கள் புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டை, பாஸ் போர்ட், ஓட்டுனர் உரிமம், பான் கார்டு, மத்திய அல்லது மாநில அரசின் பொதுத்துறை நிறுவனங்கள், உள்ளாட்சி அமைப்புகள் அல்லது வரையறுக்கப்பட்ட பொது நிறுவனங்கள் ஆகியவை வழங்கியுள்ள புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை உள்ளிட்ட 14 வகையான புகைப்பட ஆவணங்களில் ஒன்றைக் காட்டி வாக்களிக்கலாம் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. புகைப்படம் இல்லாத எந்த ஆவணமும் ஏற்கப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த உள்ளாட்சி இடைத் தேர்தலில் 5 ஆயிரம் மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. மாநில தேர்தல் ஆணையத்திடம் உள்ள ஓட்டுப்பதிவு எந்திரங்களில், யாருக்கும் வாக்களிக்க விரும்பாதவர்கள் பயன்படுத்தும் ‘நோட்டா' பொத்தான் வசதி இல்லை. எனவே ‘நோட்டா' பயன்படுத்த விரும்புகிறவர்கள் 49 ஓ படிவத்தை பெற்று பூர்த்தி செய்து கொடுக்கலாம் என்று தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இத்தேர்தலில் மொத்தம் 1,486 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். அனைத்து இடங்களிலும் அ.தி.மு.க. போட்டியிடுகிறது. பாரதீய ஜனதா, கம்யூனிஸ்டு கட்சிகளும் களம் இறங்கி உள்ளன. தி.மு.க. உள்பட மற்ற கட்சிகள் இந்த தேர்தலை புறக்கணித்துள்ளன.
அனைத்து வாக்குச் சாவடிகளிலும் தகுந்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 22-ந்தேதி காலை 8 மணிக்கு ஓட்டுகள் எண்ணப்படுகின்றன. பிற்பகல் ஓட்டு எண்ணிக்கை முடிவுகள் தெரியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.