ஜெ. ஆட்சியில் பத்திரிக்கை சுதந்திரமே இல்லை... திமுக மாநாட்டில் புகார்
திருச்சி: ஜெயலலிதா முதல்வராக வந்தது முதலே தமிழகத்தில் பத்திரிக்கை சுதந்திரமே இல்லாமல் போய் விட்டது. நக்கீரன் உள்ளிட்ட பத்திரிகைகள் மீது வழக்குகள் போடப்படுகின்றன என்று திமுக மாநாட்டில் புகார் கூறப்பட்டது.
திருச்சி திமுக மாநாட்டின் 2ம் நாளா இன்று ஜனநாயகத்தின் வேர்கள் என்ற தலைப்பில் பேசிய குடியாத்தம் குமரன் என்பவர் பேசினார்.
அப்போது அவர் கூறுகையில்,
தமிழக சட்டமன்றத்திலே ஜனநாயகம் இல்லை. ஜெயலலிதாவின் சர்வாதிகாரம்தான் தலை தூக்கியிருக்கிறது. ஜெயலலிதாவை யார் புகழ்ந்து பேசுகிறார்களோ, அவர்களுக்கு மட்டும்தான் வாய்ப்பு. ஆனால் ஜெயலலிதாவை எதிர்த்து பேச யாருக்கும் வாய்ப்பு தர மறுக்கப்படுகிறது.
யாரோ எழுதிக்கொடுப்பதை அமைச்சர்கள் பேசுகிறார்கள். யாரோ எழுதிக் கொடுப்பதை ஜெயலலிதா பேசுகிறார். சர்வாதிகாரமான சட்டமன்றமாக தமிழக சட்டமன்றம் உள்ளது. சபாநாயகர் நாற்காலியில் உட்காந்திருக்கிறாரா, நிற்கிறாரா என்று யாருக்கும் தெரியாது. ஒரு சைசாக நின்றிருப்பார்.
மு.க.ஸ்டாலின் மீது ஒருவர் பொய் வழக்கு போடுகிறார். சம்மன் வரவில்லை. உடனே மு.க.ஸ்டாலின் நீதிமன்றத்துக்கு செல்கிறார். நீதிபதி கேட்டார் உங்கள் மீது என்ன வழக்கு என்று. என் மீது ஒருவர் பொய் வழக்கு சுமத்திருக்கிறார் என்று சொன்னவுடன், சம்மனே பெறாமல் நீதிமன்றத்திற்கு வந்தததற்கு பாராட்டு தெரிவித்து அந்த வழக்கையே ரத்து செய்தார் நீதிபதி.
ஆனால் பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் 13 வருடங்களாக சொத்து குவிப்பு வழக்கிலே ஜெயலலிதா வாய்தா வாங்கிக்கொண்டு வாய்தா ராணியாக உள்ளார். தீர்ப்பு வரும் நேரத்தில் நீதிபதியையே மாற்ற சொல்கிறார்.
தன் மீது ஒரு வழக்கு என்றால் ஒரு வழக்கறிஞரை வைத்துக்கொள்ளலாம். ஆலந்தூர் பாரதி நல்ல வழக்கறிஞர், அவரை வைத்து வாதாடலாம். வெற்றி பெறலாம். ஆனால் எனக்கு இந்த நீதிபதிதான் வேண்டும். அந்த நீதிபதி வந்தால்தான் எனக்கு வழக்கில் வெற்றி கிடைக்கும் என்று நீதிமன்றத்திலும் சர்வாதிகாரத்தை ஜெயலலிதா செலுத்திக்கொண்டிருக்கிறார்.
பத்திரிக்கை சுதந்திரம் தமிழகத்தில் இல்லை. பல்வேறு பத்திரிகைகள் மீது வழக்குகளை ஜெயலலிதா அரசு தொடர்ந்திருக்கிறது. நக்கீரன் மீது வழக்கு. இந்து மீது வழக்கு, டைம்ஸ் இன்டியா மீது வழக்கு. நிர்வாகம் என்று சொன்னால் இன்றைக்கு சந்தி சிரிக்கிறது. பள்ளிக்கல்வித்துறையில் மட்டும் ஜெயலலிதா ஆட்சியில் 5 அமைச்சர்களை மாற்றியுள்ளார் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications