வைகோவுக்கு மீண்டும் ராஜ்யசபா சீட் இல்லை? திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? துரை வைகோ பதில் என்ன?
சென்னை: மதிமுக பொதுச்செயலாளரும் திராவிடர் இயக்க மூத்த தலைவர்களில் ஒருவருமான வைகோவுக்கு மீண்டும் ராஜ்யசபா எம்பி பதவியை திமுக தருமா என்பது தெரியவில்லை; அப்படி ராஜ்யசபா எம்பி பதவியை வைகோவுக்கு திமுக தராத போதும், திமுக தலைமையிலான கூட்டணியிலேயே மதிமுக நீடிக்கும் என்று அக்கட்சியின் முதன்மை செயலாளர் துரை வைகோ தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் துரை வைகோ கூறியதாவது: திமுக ஆட்சியிலும் சில குறைபாடுகள் இருக்கலாம். பல சவால்களுக்கு மத்தியில் திமுக ஆட்சி நடைபெறுகிறது. முடிந்த அளவு பல்வேறு திட்டங்களை திமுக அரசு செயல்படுத்தி இருக்கிறது. ஆனாலும் சிக்கல்கள், தடைகளுக்கு நடுவே திமுக,சிறப்பான ஆட்சியை தந்து கொண்டிருக்கிறது.

அடுத்த ஒரு ஆண்டில் சட்டசபை தேர்தல் வரப் போகிறது. யார் ஆட்சியில் இருக்க வேண்டும் என்பதை மக்களே தீர்மானிப்பார்கள். எதிர்க்கட்சித் தலைவர்கள், தொண்டர்களை உற்சாகப்படுத்தும் வகையில் பேசுவார்கள்.
தமிழ்நாடு முழுவதும் விரைவில் சுற்று பயணம் செய்ய இருக்கிறோம். மதிமுகவுக்கு செல்வாக்கு உள்ள தொகுதிகளைக் கண்டறிந்து அதில் கூடுதல் கவனம் செலுத்துவோம்.
வைகோவுக்கு ராஜ்யசபா எம்பி பதவி மீண்டும் கிடைக்குமா? திமுக தருமா? என்பது தெரியாது. அனாலும் திமுக கூட்டணியில்தான் மதிமுக நீடிக்கும். இவ்வாறு துரை வைகோ கூறினார்.
முன்னதாக மறுமலர்ச்சி தொழிலாளர் முன்னணியின் தமிழ்நாடு மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகள் பணியாளர் மறுமலர்ச்சி சங்க அலுவலகத் திறப்பு விழா, சென்னை ரிப்பன் மாளிகை வளாகத்தில் நடைபெற்றது. இந்த அலுவலகத்தை துரை வைகோ திறந்து வைத்தார்.
அப்போது பேசிய துரை வைகோ "தொழிலாளர்களே, உங்களுக்கு இழப்பதற்கு ஒன்றுமில்லை, கைவிலங்குகளைத் தவிர," என்று காரல் மார்க்ஸ் கூறியுள்ளார்.
இந்தப் பிரகடனத்தை மெய்ப்பிக்கும் வகையில், சர்வாதிகாரத்தை எதிர்த்து, தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகளை மீட்க உயிர்நீத்த தொழிலாளர்களுக்கு ஆண்டுதோறும் புகழஞ்சலி செலுத்தும் வகையில் மே 1 ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது.
1990 ஆம் ஆண்டு, டெல்லியில் மாநிலங்களவையில், உலகம் முழுவதும் தொழிலாளர்களைப் போற்றும், மே 1 ஆம் தேதியை ஊதியத்துடன் கூடிய விடுமுறை நாளாக நாடு முழுவதும் அறிவிக்க வேண்டுமென வைகோ, அன்றைய பிரதமர் வி.பி.சிங் அவர்களிடம் முறையிட்டு, அனைத்து உறுப்பினர்களிடமும் ஆதரவு திரட்டினார்.
அதன் விளைவாக, மே 1 ஆம் தேதி ஊதியத்துடன் கூடிய விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டது. தொழிலாளர்களின் நலனுக்காக எப்போதும் போராடும் இயக்கம் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் என்றார்.












Click it and Unblock the Notifications