எவ்வளவு பெரிய ஆளா இருந்தாலும் சரி.. இளங்கோவன் விடும் எச்சரிக்கை
சென்னை: விருப்ப மனு கொடுத்தால் மட்டுமே சீட் கொடுப்பது குறித்து பரிசீலிக்கப்படும். அப்படித் தராதவர்கள் யாராக இருந்தாலும் சரி, எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் சரி, கண்டிப்பாக சீட் தரப்பட மாட்டாது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறியுள்ளார்.
இதுகுறித்து சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், தமிழக சட்டசபைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக ஆயிரக்கணக்கானோர் விருப்ப மனு கொடுத்துள்ளனர். தொகுதிக்கு 10க்கும் மேற்பட்டோர் கொடுத்துள்ளனர்.

இவர்களின் தகுதி, ஜெயிப்பார்களா என்பது உள்ளிட்டவை தற்போது ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆய்வில் 2 சதவீதம் பேர் மட்டுமே கலந்து கொள்ளவில்லை. மற்றவர்கள் கலந்து கொண்டனர்.
இதுவரை ஒதுக்கீட்டு முறை கடைப்பிடிக்கப்பட்டு வந்தது. இனிமேல் அது கிடையாது. தகுதி உள்ளவர்களுக்கு மட்டுமே சீட் கிடைக்கும்.
விருப்ப மனு கொடுத்தவர்களுக்கு மட்டுமே சீட் கிடைக்க வாய்ப்புண்டு. விருப்ப மனு கொடுக்காதவர்கள், ஆய்வில் கலந்து கொள்ளாதவர்கள், அவர்கள் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் சரி, அவர்களுக்கு சீட் வழங்கப்பட மாட்டாது.
ராகுல் காந்தி விரைவில் திமுக தலைவர் கருணாநிதியைச் சந்திக்க வருகிறார். அடுத்த மாதம் 20ம் தேதி திருச்சியில் திராவிடர் கழகம் சமூகநீதி மாநாட்டில் கருணாநிதி, நிதிஷ்குமார், லாலு பிரசாத் யாதவ் ஆகிய தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள். அந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ராகுல் காந்திக்கு அழைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. விரைவில் அவர் தனது முடிவை அறிவிப்பார் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications