ஸ்மார்ட் கார்டு இல்லையா? ஜன. 1 முதல் ரேஷன் பொருட்கள் கட்....
ஸ்மார்ட் கார்டு இல்லாதவர்களுக்கு 2018 ஜனவரி 1ஆம்தேதி முதல் ரேஷன் கடைகளில் பொருட்கள் வழங்கக்கூடாது என்று பொதுவிநியோகத்துறை உத்தரவிட்டுள்ளது.
சென்னை: ஜனவரி 1ம்தேதி முதல் ஸ்மார்ட் கார்டு இல்லாதவர்களுக்கு ரேஷன் கடைகளில் பொருட்கள் வழங்கக்கூடாது என்று பொது விநியோகத்துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் நடக்கும் முறைகேடுகளை தவிர்க்க ஸ்மார்ட் ரேஷன் கார்டு கடந்த ஏப்ரல் மாதம் முதல் அரசு சார்பில் வழங்கப்பட்டது.
இ-சேவை மையங்கள் மூலமாகவும் ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி 60 சதவீதம் பேருக்கு மட்டுமே ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன.

ஸ்மார்ட் கார்டு சிக்கல்
நடிகையின் புகைப்படம், செருப்பு, ஆண் பெயருக்கு பெண் படம், பிள்ளையாருக்கு ஸ்மார்ட் கார்ட் என பல குளறுபடிகள் நடந்தன. குளறுபடிகள் காரணமாக இன்னும் 40 சதவீதம் பேருக்கு ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் வழங்கவில்லை.

டிசம்பருடன் கடைசி
தமிழகத்தில் இ சேவை மையங்கள் மூலமும், பொதுவிநியோகத்துறை மூலமும் அதிக பிழைகளோடு வழங்கப்பட்ட 3 லட்சத்து 20 ஆயிரம் கார்டுகள் நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஸ்மார்ட் கார்டு பெறாத அட்டைதாரர்கள் இந்த மாதத்திற்குள் தங்களுக்கான ஸ்மார்ட் ரேஷன் கார்டு பெற வேண்டும் என்று அரசு அறிவுறுத்தி உள்ளது.

ஸ்மார்ட் கார்டுகளுக்கு மட்டுமே
இந்நிலையில் ரேஷன் ஸ்மார்ட் கார்டு வழங்கும் பணிகளை வரும் 30ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி வரும் ஜனவரி 1ஆம்தேதி முதல் ரேஷன் கடைகளில் ஸ்மார்ட் கார்டு உள்ளவர்களுக்கு மட்டுமே பொதுவிநியோக பொருட்கள் வழங்கவேண்டும்.

ரேசனில் அரிசி, பருப்பு, சர்க்கரை
பழைய அட்டை வைத்திருப்பவர்களுக்கு ரேஷன் பொருட்கள் இல்லை என்று மாவட்ட வழங்கல் அதிகாரிகள், வட்ட வழங்கல் அலுவலர், கூட்டுறவுத்துறை அதிகாரிகளுக்கு பொதுவிநியோகத்துறை அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
எனவே ஸ்மார்ட் கார்டு பெறாத அட்டைதாரர்கள் இந்த மாதத்திற்குள் தங்களுக்கான ஸ்மார்ட் ரேஷன் கார்டு பெற்றுக்கொண்டால் மட்டுமே அடுத்த மாதம் முதல் ரேசன் பொருட்களை பெற முடியும்.












Click it and Unblock the Notifications