ராமதாஸ், அன்புமணிக்கு அச்சுறுத்தல் இல்லை: ஹைகோர்ட்டில் அரசு வக்கீல்

சென்னை உயர்நீதிமன்றத்தில் பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி இன்று ஒரு மனு தாக்கல் செய்தார். அதில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் ஆகியோருக்கு அரசு வழங்கிய பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது. இருவருக்கும் அச்சுறுத்தல் உள்ளதால் மீண்டும் போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தார்.
இம் மனு இன்று உயர்நீதிமன்ற நீதிபதி கேகே சசிதரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ஜி.கே.மணி சார்பில் ஆஜர் ஆன வழக்கறிஞர் பாலு, டாக்டர் ராமதாஸ், அன்புமணி ஆகியோர் தேர்தல் பிரச்சாரத்துக்கு செல்லவேண்டியிருக்கிறது. இதனால் போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று வாதாடினார்.
அரசு தரப்பில் ஆஜரான இன்பதுரையோ, பாதுகாப்பு தொடர்பான குழு கூட்டம் கடந்த மாதம் 19-ந்தேதி நடைபெற்றது. இதில் போலீஸ் உயர் அதிகாரிகளும், மத்திய அரசு கண்காணிப்பு அதிகாரிகளும் கலந்து கொண்டனர். அச்சுறுத்தல் எதுவும் இல்லாததால் டாக்டர் ராமதாஸ், அன்புமணி ஆகியோருக்கு போலீஸ் பாதுகாப்பு தேவை இல்லை என்று முடிவு செய்யப்பட்டது என்றார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, பாதுகாப்பு நடவடிக்கை குறித்து 2 வாரத்தில் விளக்கம் அளிக்கும்படி அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார். அத்துடன் ராமதாஸ், அன்புமணி ஆகியோர் லோக்சபா தேர்தலின்போது எங்கு பிரச்சாரம் செய்வார்கள் என்பது பற்றிய பட்டியலை சம்பந்தப்பட்டவர்கள் வியாழக்கிழமைக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications