பொய், பொய்.. தீபாவை யாரும் தாக்கவில்லை.. தீபக் திடுக் பேட்டி
சென்னை: போயஸ் கார்டன் இல்லம் எனக்கும் தீபாவுக்கும் சொந்தமானது. போயஸ் இல்லத்துக்கு வந்த தீபாவை யாரும் தடுக்க வில்லை என்று தீபக் தெரிவித்துள்ளார்.
இன்று காலை 9 மணிக்கு சென்னையில் உள்ள போயஸ் இல்லம் சென்ற தீபாவை அங்கிருந்த பாதுகாவலர்கள் உள்ளே செல்ல விடாமல் தடுத்ததாகவும், தீபாவை தாக்கியதாகவும் புகார் கூறப்பட்டது.
இது பற்றி கூறியுள்ள தீபாவின் சகோதரர் தீபக், "போயஸ் கார்டன் இல்லம் எனக்கும் தீபாவுக்கும் சொந்தமானது. என்னையும் தீபாவையும் யாரும் தடுக்க முடியாது. சகோதரி தீபாவை நான் தான் போயஸ் இல்லத்துக்கு அழைத்தேன்.
அதன் பேரில் தீபாஅங்கு வந்தார். கார்டனில் ஜெயலலிதாவின் படத்திற்கு தீபா மரியாதை செலுத்தினார். அவரை யாரும் தடுக்கவில்லை. யாரும் தீபாவை தாக்கவில்லை. அவர் விளம்பரத்திற்காக இவ்வாறு கூறுகிறார் என்று தெரிவித்துள்ளார்.
தீபா போயஸ் கார்டன் இல்லம் சென்ற போது உடன் செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர்கள் தாக்கப்பட்டது பெரும் பரபரப்பை போயஸ் கார்டன் பகுதியில் ஏற்படுத்தியுள்ளது. அதே நேரத்தில் ஜெயலலிதா வீட்டு வாசலில் தீபாவும், தீபக்கும் 'குழாயடி சண்டை' போட்டுக்கொண்டனர்.
எல்லா தொலைக்காட்சிகளும் அவர்களின் சண்டையை லைவ் செய்தன. இது அதிமுகவில் பெரிய அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது என்றும், இவர்கள் இருவரையும் எப்படி சமாளிப்பது என்று புரியாமல் தினகரன் குரூப் விழிக்கிறது என்றும் அதிமுக வட்டாரம் தெரிவிக்கிறது.