தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது... அடுத்த 2 நாட்களுக்கு மிதமான மழை பெய்யும்: வானிலை மையம்
தமிழகத்தில் இன்று முதல் வடகிழக்கு பருமவழமை தொடங்கி இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
சென்னை: தமிழகத்தில் இன்று முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் ஆண்டு தோறும் அக்டோபர் 20-ம் தேதி வாக்கில், தென்மேற்கு பருவமழை முடிந்து, வடகிழக்கு பருவமழை தொடங்குவது வழக்கம். வடகிழக்கு பருவமழை காலத்தில் தமிழகம் அதிகளவு மழை பெறும்.
இந்தாண்டும் வடகிழக்கு பருவமழை வழக்கம் போல் கடந்த 20ம் தேதி தொடங்கும் என முதலில் எதிர்பாக்கப்பட்டது. பின்னர் வங்கக் கடலில் ஏற்பட்ட வளிமண்டல காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக, தமிழக வானிலையில் மாற்றம் ஏற்பட்டு, தமிழக பகுதியில் இருந்த ஈரப்பதம் ஈர்க்கப்பட்டது. தமிழகத்தில் வட மாவட்டங்களில் பனிப்பொழிவு தொடங்கியது. இதனால், தமிழகத்தில் வடகிழக்கு பருவழை தொடங்குவது தள்ளிப்போனது.
இந்நிலையில், நேற்று இரவு முதலே தமிழகத்தில் சென்னை உட்பட சில இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.
அதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் இன்று முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கியதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. ஈரப்பதம் மிகுந்த காற்று தென்னிந்தியா முழுவதும் பரவியுள்ளதால் மழை பெய்வதாகவும், இன்னும் இரண்டு நாட்களுக்கு மிதமான மழை பரவலாக பெய்யும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதோடு, இந்த மழை காலத்தில் தமிழகம் சராசரியாக 39 முதல் 44 செமீ வரை மழை பெரும் என்றும் வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை அக்டோபர் 28-ந் தேதி தொடங்கியது. யாரும் எதிர்பாராத வகையில் தமிழகத்தில் கடந்த ஆண்டு நவம்பர் 10-ந் தேதி கனமழை பெய்தது. அதைத் தொடர்ந்து வட கடலோர தமிழகத்தில் கனமழை இருந்தது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்டங்களில் மீண்டும் மழை கொட்டியது.
இதுபோல் அதிகளவு மழை பெய்ததால் கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை காலத்தில் தமிழகம் இயல்பான அளவை விட 53 சதவீதம் (67 செ.மீ.) அதிகமாக மழையை பெற்றது குறிப்பிடத்தக்கது.