வட கிழக்குப் பருவ.. மழை வருது மழை வருது குடை கொண்டு வா... 20ம் தேதி முதல்!
சென்னை: 2015ம் ஆண்டை உலுக்கி எடுத்து விட்டு விடை பெற்றுச் சென்ற வட கிழக்குப் பருவ மழை இதோ.. மீண்டும் தமிழகத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. அக்டோபர் 20ம் தேதி முதல் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு வட கிழக்குப் பருவ மழை தமிழகத்தின் பல பகுதிகளை பெரும் பாடாய்ப் படுத்தி எடுத்து விட்டது. சென்னை மூழ்கியே போனது. அந்த வடு இன்னும் மக்கள் மனதிலிருந்து விலகவில்லை என்பதால் இந்த ஆண்டு மழை எப்படி இருக்குமோ என்ற அச்சமும் மக்கள் மனதை உறுத்திக் கொண்டுதான் உள்ளது.
இந்த நிலையில் தற்போது அக்டோபர் 20ம் தேதி முதல் வட கிழக்குப் பருவ மழை தொடங்கக் கூடிய வாய்ப்புகள் உள்ளதாக வானிலை ஆய்வ மையம் தெரிவித்துள்ளது.
தென் மேற்குப் பருவ மழை
தென்மேற்கு பருவமழை காலம் பொதுவாக தீபகற்பத்தின் தென் கோடியில் மே மாதம் இறுதியிலோ அல்லது ஜூன் மாதம் தொடக்கத்திலோ தொடங்கி 3 மாதங்களுக்கு மழையை கொடுக்கும். இது தான் இந்தியாவின் பெரும் பகுதிக்கு கணிசமான மழையை தரக்கூடியது. அந்தவகையில் இந்த ஆண்டு தென் மேற்கு பருவமழை தமிழகத்தில் ஜூன் மாதம் தொடங்கியது.
தமிழகத்தில் பற்றாக்குறை
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை குறைவாகவே இருக்கும். பொதுவாக தென்மேற்கு பருவமழை காலத்தில் தமிழகம் பெறும் இயல்பான மழை அளவு 32 செ.மீ. ஆகும். ஆனால் இந்த ஆண்டு தமிழகம் 25.5 செ.மீ. மழை அளவு தான் பெற்று இருக்கிறது. இது இயல்பான மழை அளவை விட 20 சதவீதம் குறைவு. இந்த நிலையில் வட கிழக்குப் பருவ மழையைத்தான் தமிழகம் அதிகம் நம்பியுள்ளது.
20ம் தேதி தொடங்கலாம்
தென் மேற்குப் பருவ மழைக்காலம் முடிவதற்குள்ளாகவே வட கிழக்கு பருவ மழை தொடங்குவது வழக்கம். அந்த வகையில் இந்த மாதம் 20ம் தேதி மழை தொடங்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறுகையில், தென்மேற்கு பருவமழை காலம் ஜூன் மாதம் கேரளாவில் தொடங்கியது. தற்போது ஹரியானா, பஞ்சாப்பை கடந்து தென்மேற்கு பருவமழை படிப்படியாக குறைந்து ராஜஸ்தான் மாநிலம் அருகே பின்வாங்குகிறது.
மழை வரும்
தென்மேற்கு பருவமழை முடிவில், மத்திய இந்தியாவில் உயர் அழுத்த காற்று சுழற்சி உருவாகி வங்க கடல் பகுதியில் திரளான மேகக்கூட்டங்களுடன் வந்து மழையை கொடுக்கும். அதுவே வடகிழக்கு பருவமழை தொடக்கம் ஆகும். இன்னும் 10 நாட்களில் தென்மேற்கு பருவமழை காலம் முடிந்து, 20-ந் தேதி வடகிழக்கு பருவமழை காலம் தொடங்குவதற்கான வாய்ப்பு இருக்கிறது.
கூடுதல் மழையை எதிர்பாரக்கலாம்
வடகிழக்கு பருவமழை காலத்தில் தமிழகம் அதிகளவு மழை பெறும். இந்த மழை காலத்தில் தமிழகம் பெறும் இயல்பான மழை அளவு 44 செ.மீ. இந்த ஆண்டு இயல்பான மழை அளவில் தமிழகம் 92 சதவீதம் முதல் 100 சதவீதம் வரை பெறுவதற்கான வாய்ப்பு அதிகம் இருக்கிறது என்று அவர்கள் கூறியுள்ளனர்.
மக்களுக்கு குறிப்பாக விவசாயிகளுக்கும், கிராமங்களுக்கும் கஷ்டத்தைக் கொடுக்காமல், மகிழ்ச்சி தரும் வகையில் மழை பெய்தால் மிக்க மகிழ்ச்சிதான்.