சுத்தமான காற்று... வடஇந்தியா மோசம்... மதுரைக்காரங்களே நீங்க கொடுத்துவச்சவங்க!
சென்னை: இன்றைய சூழ்நிலையில் சுத்தமான காற்றும், சுகாதாரமான குடிநீரும் இருக்கும் இடம் சொர்க்கத்திற்கு சமம். நல்ல தூய்மையான குடிநீரை காசு கொடுத்து வாங்கி குடிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறோம். உலகின் பல பகுதிகளில் சுத்தமான காற்று கேன்களில் அடைத்து விற்பனை செய்யப்படுகிறது.
காற்றில் அதிக மாசு கலந்துள்ள நகரங்களில் இந்தியாவில் டெல்லி முதலிடத்தில் உள்ளது. பாட்னா, குவாலியர், ராய்ப்பூர், அகமதாபாத், லக்னோ, ஃபரிதாபாத், கான்பூர், அம்ரிஸ்தர், லூதியானா நகரங்களிலும் காற்றில் அதிக மாசு உள்ளதாக உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் மதுரைவாசிகள் சுத்தமான காற்றை சுவாசிப்பதாக உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது. இதனால் மதுரைவாசிகள் பாதி சொர்க்கத்தில் வசிக்கின்றனர் என்றே கருதலாம்.
சுத்தமான காற்று, குடிநீர் எல்லாம் எதிர்காலத்தில் மனிதனுக்கு சாத்தியமா என கேள்வி கேட்கும் அளவுக்கு சுற்றுச் சூழல் மாசடைந்து வருகிறது. அதை முறியடிக்கவும் விஞ்ஞானிகள் முயற்சித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
நகரங்களில் தொழிற்சாலைகள் அதிகரித்துவரும் நிலையில், அவற்றால் ஏற்படும் சுற்றுச்சூழல் கேடும் அதிகரித்து வருகிறது. இதை தவிர்க்க முடியாமல் நாம் தவித்து வருகிறோம். ஆலைகளில் இருந்து வெளியேறும் மாசு, போக்குவரத்து நெரிசலின்போது வாகனங்களில் இருந்து வெளியாகும் புகை ஆகியவை காற்றில் கலந்து சுகாதாரக் கேட்டை ஏற்படுத்துகின்றன.

காற்று மாசு
மாசு காரணமாக காற்று மண்டலம், நச்சு நிறைந்த மண்டலமாக மாறுகிறது. காற்றில் கலந்துள்ள மாசுகளில் சில நச்சுத்தன்மை மிக்கவை. இவற்றை நாம் சுவாசிக்கும்போது உடல் நலக் குறைவு ஏற்படுகிறது.

நோய் பாதிப்பு
காற்றினால் ஏற்படும் மாசால், இருதய நோய், நுரையீரல் சார்ந்த நோய்கள் ஏற்படுகின்றன. கருவில் இருக்கும் குழந்தையின் வளர்ச்சியும் பாதிக்கப்படுகிறது என்று மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர். காற்று மாசு காரணமாக ஆஸ்துமா, பிரான்கைடிஸ், நுரையீரல் புற்றுநோய் ஆகியவை ஏற்பட வாய்ப்புள்ளது.

குழந்தைகள் இறப்பு
காற்று மாசுபடுவதைக் கட்டுக்குள் கொண்டு வராமல் இருந்தோமானால், வருங்காலத்தில் பிறக்கும் குழந்தைகள் அளவில் சிறியதாக, எடை குறைவாக இருக்கும். குறை பிரசவம் ஏற்படும். இத்தகைய குழந்தைகளுக்கு மூளை வளர்ச்சி பாதிக்கப்படும் என்றும் மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இப் பாதிப்பினால், இந்தியாவில் ஆண்டுக்கு சுமார் 6 லட்சம் குழந்தைகள் இறக்கின்றன என்று மருத்துவ ஆய்வு முடிவு ஒன்று தெரிவிக்கிறது.

மாசடைந்த நகரங்கள்
உலக அளவில் 20 நகரங்கள் மாசடைந்த நகரங்கள் என உலக சுகாதார நிறுவனம் கண்டறிந்துள்ளது. இதில் 13 நகரங்கள் இந்தியாவில் உள்ளனவாம். காற்று மாசில் சீனா, அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக 3ஆவது இடத்தில் இந்தியா உள்ளது.

டெல்லி மாசு
இந்தியாவில் உள்ள மாசடைந்த நகரங்களின் பட்டியலில் சென்னை, மும்பை, டெல்லி, கொல்கத்தா ஆகிய நகரங்கள் இடம்பெற்றுள்ளன. இதில் முதலிடம் வகிப்பது டெல்லி. சீனாவின் பெய்ஜிங் நகரைவிட டெல்லியில் மாசு அதிகமுள்ளது எனக் கண்டறியப்பட்டுள்ளது. காற்று மாசை கட்டுப்படுத்த மாநில அரசு என்னென்னவோ செய்து வருகிறது.

வட இந்தியாவில் மாசு அதிகம்
வட இந்தியாவில் பெரும்பாலான நகரங்களில் காற்றில் அதிக மாசு கலந்துள்ளது. குறிப்பாக உத்தரபிரதேசம், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில் உள்ள நகரங்களில் காற்றில் அதிகளவு மாசு கலந்துள்ளதாம்.

டெல்லி நம்பர் 1
காற்றில் அதிக மாசு கலந்துள்ள நகரங்களில் இந்தியாவில் டெல்லி முதலிடத்தில் உள்ளது. பாட்னா, குவாலியர், ராய்ப்பூர், அகமதாபாத், லக்னோ, ஃபரிதாபாத், கான்பூர், அம்ரிஸ்தர், லூதியானா நகரங்களிலும் காற்றில் அதிக மாசு உள்ளதாக உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.

சுத்தமான நகரங்கள்
சுத்தமான காற்றுள்ள நகரங்களும் இந்தியாவில் உள்ளன. இந்த நகரங்களின் பட்டியலை உலக சுகாதார மையம் வெளியிட்டுள்ளது. இதில் கேரளத்தில் உள்ள கொல்லம், பத்தனம் திட்டா நகரங்களும், கர்நாடகாவில் ஹசன் நகரம் இடம் பெற்றுள்ளது.

மதுரை - பாண்டிச்சேரி
தமிழகத்தில் உள்ள மதுரையும், அண்டை மாநிலமான புதுச்சேரியும் சுத்தமான காற்றுள்ள நகரங்களில் பட்டியலில் இடம்பிடித்துள்ளது. இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ள 5 நகரங்களுமே தென்இந்தியாவை சேர்ந்தவை என்பதுதான் முக்கிய அம்சம். சுற்றுப்புற சூழ்நிலையை பாதுகாத்து சுத்தமான காற்றுள்ள நகரங்கள் என்ற பெருமையை தக்க வைத்துக்கொள்ளவேண்டும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications