காற்று... காற்று... ஈரக்காற்று வீசுது... - வடகிழக்கு பருவமழை பற்றி வானிலை மையம்
அடுத்த 24 மணிநேரத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கும் என்ற சென்னை வானிலை ஆய்வுமையம் கூறியுள்ளது.
சென்னை: வடகிழக்கு திசையில் இருந்து ஈரப்பதமான காற்று வீச தொடங்கி இருக்கிறது. வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு சாதகமான சூழல் ஏற்பட்டு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வுமைய இயக்குநர் பாலச்சந்திரன் கூறியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடையே பேசிய வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன், வடகிழக்குத் திசையில் இருந்து ஈரப்பதமான காற்று வீசத் தொடங்கி இருக்கிறது.
தற்போது வடகிழக்குப் பருவமழை தொடங்குவதற்கு சாதகமான சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே, அடுத்த 24 மணி நேரத்துக்குள் தமிழகம் மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு இருக்கிறது.

வடகடலோர மாவட்டங்களில் மழை
சென்னையை பொறுத்தவரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். விட்டு விட்டு அவ்வப்போது மழை பெய்யும், வடகடலோர மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என்றார். கடந்த 24 மணிநேரத்தில் தமிழகத்தில் பல பகுதிகளில் பரவலாக மழை பெய்துள்ளதாக இயக்குநர் பாலச்சந்திரன் கூறியுள்ளார்.

கொட்டும் மழை
சென்னையில் அவ்வப்போது விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. சிவகாசி, மதுரையில் காலை முதலே பலத்த மழை பெய்து வருகிறது. திருவாரூரில் பெய்து வரும் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

2015ஆம் ஆண்டு மழை வெள்ளம்
தமிழகத்தில் கடந்த 2015ஆம் ஆண்டு வடகிழக்கு பருவமழை காலத்தில் மழை பெய்து பெரும்பாலான இடங்களில் வெள்ளம் ஏற்பட்டது. இயல்பான அளவை விட அந்த ஆண்டு 53 சதவீதம் அதிகமாக மழை பெய்தது.

62 சதவிகிதம் மழை குறைவு
கடந்த 2016ஆம் ஆண்டு வடகிழக்கு பருவமழை எதிர்பார்த்த அளவில் இல்லை. இயல்பான அளவை விட 62 சதவீதம் குறைவாகவே மழை பெய்தது. இதனால் தமிழகம் அந்த ஆண்டு ஏமாற்றத்தை சந்தித்தது.

வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு
இந்த நிலையில் தமிழகம் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளான தெற்கு கடலோர ஆந்திரா, ராயலசீமா, தெற்கு உள் கர்நாடகா மற்றும் கேரளாவில் இந்த ஆண்டு வட கிழக்கு பருவமழை 89 சதவீதம் முதல் 111 சதவீதம் வரை பதிவாக வாய்ப்பு இருக்கிறது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது மக்களுக்கு மகிழ்ச்சியை தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications