நிர்பயாவிற்கு மட்டுமல்ல... நந்தினிகளுக்காகவும் இதுபோன்ற நீதி கிடைக்க வேண்டும்
நிர்பயா பலாத்கார வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்பு போல நந்தினி பலாத்கார வழக்கிலும் குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுவடைந்துள்ளது.
சென்னை: நிர்பயாவை கூட்டு பலாத்காரம் செய்து கொன்றவர்களுக்கு தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதே போல தமிழகத்தில் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட நந்தினி போன்றவர்களின் மரணத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
டெல்லியில் கடந்த 2012ல் ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி நிர்பயா கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் நால்வருக்கு தூக்கு தண்டனை உறுதி செய்தது உச்சநீதிமன்றம்.
இந்தியாவே ஆவலுடன் எதிர்பார்த்த இந்த தீர்ப்பில், குற்றவாளிகள் முகேஷ், பவன், அக்ஷய், வினய் சர்மா ஆகிய நான்கு பேருக்கும் மரண தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் மொத்தம் 6 குற்றாவாளிகளில், முக்கிய குற்றவாளியான ராம்சிங், கடந்த 2014ஆம் ஆண்டு திகார் சிறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
மற்றொரு குற்றவாளி 18 வயதுக்கும் கீழ் இருந்ததாக கூறி அவனை சிறுவர் சீர்திருத்தப்பள்ளிக்கு அனுப்பினர். அவனும் சில ஆண்டுகளில் சிறையில் இருந்து வெளியேறி விட்டான்.
தூக்கு தண்டனை உறுதி
டெல்லி உயர்நீதிமன்றம் விதித்த மரண தண்டனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் குற்றவாளிகள் சார்பாக மேல் முறையீடு செய்யப்பட்டது. இதை விசாரித்த நீதிபதி, குற்றவாளிகள் மரண தண்டனையை எதிர்த்து மேல் முறையீடு செய்வதில் எந்த முகாந்திரமும் இல்லை என கூறி டெல்லி உயர்நீதிமன்றம் கொடுத்த மரண தண்டனையை உறுதி செய்துள்ளது.
பெண்கள் பலாத்காரம்
நிர்பயா பலாத்கார சம்பவம் 2012ஆம் ஆண்டு தலைநகர் டெல்லியில் நடந்தது. இது கொடூரமான பலாத்கார சம்பவம். அந்த பெண் ரணப்பட்டு மரணித்தால். எனவேதான் இது நாடு முழுவதும் பெண்களை உலுக்கியது. இதனையடுத்து பெண்களுக்கு பாதுகாப்பான சட்டம் இயற்றப்பட்டது.
அதிகரித்த எண்ணிக்கை
2012ம் ஆண்டில் 24 ஆயிரத்து 923 பெண்கள் இந்தியாவில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளனர். இந்த எண்ணிக்கை 33 ஆயிரத்து 707 ஆக 2013ம் ஆண்டில் அதிகரித்துள்ளது. 2012ம் ஆண்டில் டெல்லியில் 585 பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டனர். இந்த எண்ணிக்கை 2013ல் இரண்டு மடங்காக அதாவது 1, 441 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கடந்த 2013ஆம் ஆண்டு 923 பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளனர். அதாவது நாள் ஒன்றுக்கு 3 பலாத்காரங்கள் நடந்துள்ளன.
சென்னையில் அதிகம்
தமிழகத்தில் பாலியல் பலாத்கார சம்பவங்கள் 50 சதவீதம் அதிகரித்துள்ளன. பாலியல் பலாத்கார சம்பவங்களில் சென்னைதான் முதலிடம் வகிக்கிறது.கடந்த 2012ல் மாநிலம் முழுவதும் 291 பாலியல் வழக்குகள் பதிவாயின. இது ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து கொண்டேதான் செல்கிறது.
நந்தினி கொலை
அரியலூர் மாவட்டம், செந்துறை வட்டம், சிறுகடம்பூர் கிராமம் ஆதி திராவிடர் குடியிருப்பில் வசித்த நந்தினி கடந்த டிசம்பர் மாதம் நந்தினியை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை செய்யப்பட்டார். அவரது உடல் கொடூரமான முறையில் கிணறுக்குள் இருந்து கண்டெடுக்கப்பட்டது.
கூட்டு பலாத்காரம் கரு எரிப்பு
நந்தினியை கூட்டு பலாத்காரம் செய்த கொடூரர்கள், அவளது வயிற்றில் இருந்த கருவை கிழித்து எடுத்து எரித்துள்ளனர். குற்றவாளிகளை உடனடியாக காவல்துறையினர் கைது செய்யவில்லை. பெரும் போராட்டத்திற்குப் பிறகே கைது செய்தது காவல்துறை. நிர்பயாவின் பாலியல் பலாத்கார கொலைக்கு தாமதமாக நீதி கிடைத்தாலும் மரண தண்டனை என்பது வரவேற்க்கத்தக்கது என்று பலரும் கூறி வருகின்றனர்.
நந்தினிக்கும் நீதி
நந்தினி போல தமிழகத்தில் பல தலித் சிறுமிகள், சிறு பிஞ்சுகள் கசக்கி எறியப்பட்டுள்ளனர். போரூர் பகுதியை சேர்ந்த 7 வயது சிறுமி ஹாசினி கொடூரமாக பலாத்காரம் செய்து கொல்லப்பட்டாள். இதுபோன்று பாதிக்கப்பட்ட அனைத்து நந்தினிகளின் மரணத்திற்கும் நீதி கிடைக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.