நீட் பயங்கரம்.. தமிழகத்தில் இவ்வாண்டு பழங்குடியின பிரிவை சேர்ந்த ஒரு மாணவரும் டாக்டராக முடியாத நிலை
சென்னை: தமிழகத்தில் அரசு அல்லது அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்த பழங்குடியினத்தை சேர்ந்த (ST) ஒரு மாணவர் அல்லது மாணவியும் இவ்வாண்டு எம்.பி.பி.எஸ் படிப்புக்கான சீட் பெற முடியாத சூழல் உருவாகியுள்ளது.
தாழ்த்தப்பட்ட (SC) பிரிவை சேர்ந்த மாணவர்கள் நிலைமையிலும் பெரிய வித்தியாசம் இல்லை. அரசு அல்லது அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயின்ற வெறும் 9 பேருக்கு மட்டுமே எம்.பி.பி.எஸ் சீட் கிடைக்க வாய்ப்புள்ளது.

2017ல் அரசு பள்ளிகளில் படித்த 5 பேருக்குதான், எம்.பி.பி.எஸ் சீட் கிடைத்தது. சிபிஎஸ்சி பாடத் திட்டத்தில் இருந்தே பெரும்பாலும் நீட் தேர்வுகளுக்கான கேள்விகள் கேட்கப்படுகின்றன. கிராமப்புறங்களை சேர்ந்த பலர்தான் அரசு பள்ளிகளில் பயில்கிறார்கள். எனவே அவர்களால் எம்.பி.பி.எஸ் சீட்டுகளை பெற முடியவில்லை.
இவ்வாண்டு, அரசு பள்ளிகளில் பயின்ற, 1,344 மாணவர்கள், நீட் தேர்வில் தேவைப்படும் குறைந்தபட்ச மதிப்பெண்களையாவது கடந்துள்ளார்கள். அதில் 10 பேர்தான் 300க்கு மேலும், 42 பேர் 200க்கு மேலும் மதிப்பெண்கள் எடுத்துள்ளனர். 200க்கும் மேல் மதிப்பெண் எடுத்த 42 பேரில், 9 பேர் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள். அவர்களின் குடும்ப சூழ்நிலையை வைத்து பார்த்தால், தனியார் கல்லூரிகளில் நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டணத்தை செலுத்தி அவர்களால் படிக்க முடியாத சூழல் உள்ளது.
இதில் பழங்குடியினத்தை சேர்ந்த அரசு பள்ளிகளில் அல்லது அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயின்று 200க்கும் மேல் ஒருவரும் மதிப்பெண் எடுக்கவில்லை.
நீட் தேர்வு எழுதியவர்களின் ஜாதிவாரியான அதிகாரப்பூர்வ தகவல்களை அதிகாரிகள் வைத்திருக்கவில்லை.
இதன் மூலம், வெறும் 190 மதிப்பெண்கள் எடுத்த ஒரு செல்வந்தர் வீட்டு பிள்ளை, 230 மதிப்பெண்கள் எடுத்த ஏழை வீட்டு குழந்தைகளைவிட மெடிக்கல் சீட் கிடைக்கும் வாய்ப்பை அதிகம் பெற வாய்ப்புள்ளது. இதன் மூலம் தமிழகம் கட்டிக் காப்பாற்றிய சமூக நீதி நிலை விட்டுக்கொடுக்கப்பட்டுவிட்டதாக கூறுகிறார்கள் கல்வியாளர்கள்.












Click it and Unblock the Notifications