மதுரை அலுவலகத்தை காலி செய்ய 'நோட்டீஸ்': சகாயத்திற்கு மீண்டும் நெருக்கடி
மதுரை: கிரானைட் குவாரிகளில் நடைபெற்றுள்ள முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்திவரும் ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயத்தின் மதுரை அலுவலகத்தை காலி செய்யும்படி, ஊரக வாழ்வாதார இயக்க இணை இயக்குனர் பெயரில், 'நோட்டீஸ்' ஒட்டப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மதுரை மாவட்டத்தில் நடந்த கிரானைட் முறைகேடு தொடர்பான வழக்கில், சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி கடந்த 3 மாதங்களாக விசாரணை நடத்தி வரும் ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம், கடந்த வாரம் 12ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆஜராகி, முழு அறிக்கையை தாக்கல் செய்ய காலஅவகாசம் கேட்டார். மேலும், தனக்கு சேர வேண்டிய பயணப்படி ரூபாய் 3 லட்சத்தை தர தமிழக அரசு காலம் தாழ்த்தி வருவதாகவும், அரசின் பல துறைகளில் இருந்து வரவேண்டிய ஆவணங்கள் காலதாமதம் ஆகின்றன என்றும் தெரிவித்திருந்தார்.
இதையடுத்து, பயணப்படியும், வேண்டிய ஆவணங்களையும் இரண்டு வாரத்திற்குள் அளிக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

காலி செய்ய நோட்டீஸ்
தற்போது சகாயம் சென்னையில் உள்ள நிலையில், மதுரையில் அவருக்கு ஒதுக்கப்பட்ட தமிழக அரசின் ஊரக வளர்ச்சிக்கு சொந்தமான அலுவலக கதவில், அலுவலகத்தை 15 நாட்களுக்குள் காலி செய்யுமாறு, மாவட்ட நிர்வாகம் சார்பில் நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது.

32 கடைகள்
மதுரையில் உள்ள பழைய ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில், பூமாலை வணிக வளாகம் உள்ளது. மகளிர் சுய உதவிக் குழுவினர், தங்கள் உற்பத்தி பொருட்களை விற்க ஏதுவாக, 32 கடைகள் இங்கு உள்ளன.

மாத வாடகை உயர்வு
ஊரக வாழ்வாதார இயக்கம், விக்கிர மங்கலம் மகளிர் கூட்டமைப்பு மூலம், வளாகம் பராமரிக்கப்படுகிறது. மாத வாடகை 300 ரூபாயாக இருந்தது. இந்நிலையில், 1,000 ரூபாய் வாடகை அல்லது விற்பனை லாபத்தில், 20 சதவீதம் என, வாடகை உயர்த்தப்பட்டது. இதற்கு, கடை நடத்துவோர் ஆட்சேபம் தெரிவித்ததால் பேச்சு நடக்கிறது.

நோட்டீஸ் தகவல்
இதற்கிடையே, ஊரக வாழ்வாதார இயக்க இணை இயக்குனர் பெயரில், கடைகளில் ஒட்டப்பட்ட நோட்டீசில் கூறியிருப்பதாவது:வணிக வளாக கடைகள் விக்கிரமங்கலம் கூட்டமைப்புக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது. கடைகளுக்கான வாடகை நிலுவை மற்றும் மின் கட்டணத்தை, 15 நாட்களுக்குள் செலுத்த வேண்டும். தவறினால், காலி செய்ய வேண்டி வரும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

நோட்டீஸ் ஒட்டியதால் அதிர்ச்சி
சகாயத்தின் விசாரணை அலுவலகம் உட்பட, வளாகத்தில் உள்ள, அனைத்து கடைகளிலும், 'நோட்டீஸ்' ஒட்டப்பட்டது. சகாயத்தின் அலுவலக வாடகை உள்ளிட்ட செலவுகளை, மாவட்ட நிர்வாகம் ஏற்றுள்ளது. அலுவலகத்தில், நேற்று சகாயம் இல்லாத நிலையில், 'நோட்டீஸ்' ஒட்டப்பட்டது. இது குறித்து, மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றதும், உடனடியாக, 'நோட்டீஸ்' அகற்றப்பட்டது

தொடரும் சர்ச்சை
கிரானைட் குவாரிகளில் நடைபெற்றுள்ள முறைகேடுகள் குறித்து சகாயம் விசாரிக்க துவங்கியதில் இருந்து, பல நிகழ்வுகள் சர்ச்சைக்கு உள்ளாகின. அவரது அறையில் ஒட்டுக் கேட்பு கருவி இருந்ததாக தகவல் வெளியானது. பின், அவருக்கு கொலை மிரட்டல் கடிதம் அனுப்பப்பட்டது. தற்போது அலுவலகத்தை காலி செய்யும்படி ஒட்டப்பட்ட, 'நோட்டீஸ்' சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications