நவம்பர் 1 புதுச்சேரி விடுதலை நாள்: முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு!
புதுச்சேரி: புதுச்சேரியின் விடுதலைக்காக பாடுபட்ட தியாகிகளின் வேண்டுகோளை ஏற்று நவம்பர் 1-ம் தேதியை புதுவையின் விடுதலை நாளாக முதல்வர் ரங்கசாமி நேற்று அறிவித்தார்.
புதுச்சேரி உப்பளம் மைதானத்தில் நேற்று சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசிய கொடியேற்றிய பின் முதல்வர் ரங்கசாமி ஆற்றிய உரை:

ஆகஸ்ட் 16ந் தேதியை புதுச்சேரி மாநிலத்தின் ஆட்சிமாற்ற தினமாக கொண்டாடுவதோடு, புதுவை விடுதலைக்காக பாடுபட்ட தியாகிகளின் வேண்டுகோளுக்கு ஏற்ப வரலாற்றுச் சான்றுகளை ஆய்வு செய்ய ஒரு குழுவை அமைத்தோம்.
அதன் பரிந்துரையின் படி இந்த ஆண்டு முதல் நவம்பர் 1ஆம் தேதியை புதுச்சேரியின் விடுதலை நாளாக அறிவித்து, அன்றைய நாளை அரசு விடுமுறை தினமாக அறிவிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
மக்களின் நலனுக்காக அரசு பல்வேறு திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறது. துணைநிலை ஆளுநர் தலைமையில் திட்டக் குழுக் கூட்டம் நடைபெற்றது. அதன்படி புதுவை அரசின் வரவு-செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படும்.
கருவடிக்குப்பத்தில் பெருந்தலைவர் காமராஜர் மணி மண்டபம் கட்டும் பணி ரூ.25 கோடி மதிப்பீட்டில் நடைபெறும். புதுவை நகரம், புறநகர்ப் பகுதியில் ரூ.307.46 கோடி மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த குடிநீர் விநியோகத் திட்டம், காரைக்காலில் ரூ.161.43 கோடி மதிப்பீட்டில் குடிநீர்த் திட்டப் பணிகள் துவங்கப்படும்.
புதுவையில் உள்ளது போல் காரைக்கால் திருநள்ளாறில் துணை மண்டல அறிவியல் மையம், கோளரங்கம் கட்டப்படும்.
கிராமப் புற இளைஞர்களுக்காக வில்லியனூரில் இலவச ஓட்டுநர் பயிற்சிப் பள்ளி விரைவில் தொடங்கப்படும்.
இவ்வாறு புதுவை முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications