'ஆயிரமா வேணவே வேணாங்க... 500 கொடுங்க, சில்லறை தரேன்!'
சென்னை: மத்திய அமைச்சரவையின் நேற்றைய இரவு அவசரக் கூட்டத்துக்கு முன், மத்திய அரசு திடீரென பத்து அறிவிப்புகளை வெளியிட்டது.
அந்த பத்து அறிவிப்புகளிலும் பழைய 500 ரூபாய்க்கு மீண்டும் செலாவணித் தன்மையை தற்காலிகமாக அளித்திருந்தது. அதாவது வரும் டிசம்பர் 15-ம் தேதிக்குள் பழைய 500 ரூபாய் தாள்களைப் பயன்படுத்த அவகாசம் கொடுத்துள்ளனர்.
நேற்று வரை அரசு மருத்துவமனைகள், பெட்ரோல் விற்பனை நிலையங்கள், மருந்தகங்கள், பால் அங்காடி, நுகர்வோர் கூட்டுறவுக் கடைகள், தகன மேடை, ரெயில் டிக்கெட்டுகள், அரசு பஸ் போக்குவரத்து, விமான டிக்கெட், மின்சாரம், தண்ணீர் கட்டணம், சமையல் கேஸ் சிலிண்டர்கள், புராதன இடங்களுக்கான நுழைவுச்சீட்டுகள் பெறுமிடங்கள் போன்ற இடங்களில் ரூ 1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் சிலபல விவாதங்களுக்குப் பிறகு மாற்ற முடிந்தது.
இந்த புதிய அறிவிப்புக்குப் பிறகு பெட்ரோல் நிலையங்களில் 1000 ரூபாயை வாங்க மறுத்து வருகின்றனர். புதிய அறிவிப்புக்குப் பிறகு காய்கறி கடைகள், மார்க்கெட் பகுதிகளில் மீண்டும் 500 ரூபாய் நோட்டுகளை சிலர் தாராளமாக வாங்கிக் கொள்கின்றனர். ஆனால் ஆயிரம் ரூபாயை மட்டும் பார்த்தாலே அலறுகின்றனர்.
500 ரூபாயை அடுத்த 20 நாட்களுக்கு அத்தியாவசிய சேவை மையங்களில் பயன்படுத்த முடியும் என்பதால், ஓரளவு சில்லறைத் தட்டுப்பாடு நீங்க வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது.