அட.. 4வது முறையாக காடுவெட்டி குரு தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது
இப்படி அவர் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைதாவது இது 4வது முறையாகும்.
காடுவெட்டு குருவை தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யும் உத்தரவை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் பிறப்பித்துள்ளார்.
மாமல்லபுரத்தில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற வன்னிய சங்க சித்திரை மாநாட்டின்போது, மரக்காணத்தில் இரண்டு சமுதாயத்தினருக்கு இடையே பெரும் மோதல் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் உள்பட பலர் கைது செய்யப்பட்டனர்.
மேலும், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியது, பொதுச் சொத்துக்கு சேதம் ஏற்படுத்தியது, வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாக கைது செய்யப்பட்ட பாமக எம்.எல்.ஏ. காடுவெட்டி குரு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
இதை எதிர்த்து பாமகவினர் போராட்டங்களில் குதித்தனர். இதையடுத்து குரு உள்ளிட்டோர் மீது தேசிய பாதுகாப்புச் சட்டம் பாய்ந்தது. ஆனால் அதை மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் ரத்து செய்தது. இருந்தும் விடாமல் மீண்டும் 2 முறை தமிழக அரசு குருவை தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்தது. அந்த 2 முறையும் மத்திய அரசு தலையிட்டு அவரை விடுவித்தது.
இந்த நிலையில் தற்போது மீண்டும் குருவை அதே சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.