கூடங்குளம் அணு உலையில் அணு பிளவு சோதனை தொடக்கம் - பொதுமக்கள் மீண்டும் பீதி !!
நெல்லை: கூடங்குளத்தில் முதலாவது அணு உலையில் மீண்டும் மின் உற்பத்திக்காக அணு பிளவு சோதனை தொடங்கியது. இதனால் பொதுமக்கள் பீதியில் உள்ளனர்.
நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் இந்தியா ரஷ்யா கூட்டு முயற்சியில் தலா 1000 மெகா வாட் மின் உற்பத்தி திறனுள்ள இரண்டு அணு உலைகள் அமைக்கப்பட்டுள்ளன. முதல் அணு உலை கடந்த 2013ம் ஆண்டு ஜூலை 13ம் தேதி அணு பிளவுக்கு உள்படுததப்பட்டது. அக்டோபர் 22ம் தேதி முதல் அங்கு மின் உற்பத்தி தொடங்கியது. 2014ம் ஆண்டு ஜூன் 7ம் தேதி அணு உலை அதன் முழு கொள்ளளவு மின் உற்பத்தியான ஆயிரம் மெகா வாட்டை எட்டியது.
இந்த நிலையில் கடந்த ஆண்டு ஜூன் 24ம் தேதி ஆய்வு பணிக்காக அணு உலை நிறுத்தப்பட்டது. அப்போது மீண்டும் இரண்டு மாதங்களில் மின் உற்பத்தியை தொடங்க திட்டமிடப்பட்டது. ஆனால் பல்வேறு காரணங்களால் மின் உற்பத்தி பணிகள் தள்ளி போனது. இந்த காலக்கட்டத்தில் முதலாவது அணு உலையில் சுமார் 30 சதவீத எரிகோலகள் அகற்றப்பட்டன. மின் உற்பத்தி நிறுத்தி 6 மாதங்கள் ஆகி விட்ட நிலையில் கடந்த சில நாட்களாக மீண்டும் எரிகோல்கள் பொருத்தும் பணி நடந்து வந்தது.
கடந்த 17ம் தேதி உயர் வெப்ப அழுத்த சோதனை நடந்தது. இந்த சோதனை முடிவுகள் அணுசக்தி வாரியத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதன் பின்னர் மீண்டும் மின் உற்பத்தியை தொடங்க அணுசக்தி வாரியம் ஒப்புதல் வழங்கி இருக்கிறது. இதையடுத்து முதல் அணு உலையில் அணு பிளவு சோதனை தொடங்கி நடந்து வருகிறது. இதனால் இன்னும் ஐந்து நாட்களில் கூடங்குளம் அணு உலையில் மின் உற்பத்தி தொடங்கும் என வளாக இயக்குனர் சுந்தர் தெரிவித்துள்ளார். அணு பிளவு சோதனை மீண்டும் தொடங்கியுள்ளதால் சுற்றுபுற பொதுமக்கள் மீண்டும் பீதியில் உள்ளனர்.