நுங்கம்பாக்கத்தில் காவலாளி கொலை... குடிபோதையில் கொன்ற கொலையாளி கைது
சென்னை: நுங்கம்பாக்கத்தில் குடிபோதையில் சக ஊழியரைக் கத்தியால் குத்திக் கொலை செய்த காவலாளி கைது செய்யப்பட்டார். நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் இளம்பெண் சுவாதி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தின் பரபரப்பு அடங்கும் முன்பாகவே, அதே பகுதியில் கொலை நடந்துள்ளது பதற்றத்தை அதிகரித்துள்ளது.
இன்போசிஸ் நிறுவன மென் பொறியாளர் சுவாதி நேற்று காலையில் மர்மநபர் ஒருவரால் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டார். பட்டப்பகலில், ரயில் நிலையத்தில் நடந்த இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. கொலையாளியை நேரில் பார்த்தவர்கள் அவனைப் பற்றிய அடையாளத்தை கூறினாலும் போலீசாரால் இன்னமும் குற்றவாளியை கண்டுபிடிக்க முடியவில்லை.
கொலை நடந்த 24 மணி நேரத்திற்கு முன்பாக நுங்கம்பாக்கம் பகுதியில் மேலும் ஒரு கொலை நடந்துள்ளது. காவலாளிகளுக்கு இடையே குடிபோதையில் ஏற்பட்ட வாய்த்தகராறு முற்றி அது கொலையில் முடிந்துள்ளது. சக ஊழியர் ரமேஷ் என்பவரை பழனி என்பவர் கத்தியால் குத்தியுள்ளார்.
கத்தியால் குத்தியதில் ரமேஷ் உயிரிழந்தது தெரியாமல் அங்கே பழனி உறங்கியுள்ளார். காலையில் ரத்த வெள்ளத்தில் கிடந்த ரமேஷை பார்த்து அதிர்ச்சிடைந்தவர்கள் போலீசில் புகார் தெரிவித்தனர். இது குறித்து போலீசார் பழனியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.