மதுரையில் நர்சிங் கல்லூரி மாணவி பலாத்காரம் செய்து கொலை
மதுரை: மதுரை அருகே நர்சிங் கல்லுாரி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து கழுத்தை நெரித்து படுகொலை செய்த கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
மதுரை பூனையூர் சிந்தாமணியை சேர்ந்த 18 வயது மாணவி, தனியார் நர்சிங் கல்லுாரியில் இரண்டாம் ஆண்டு படிக்கிறார். கல்லுாரி முடிந்து மாலை 5 மணிக்கு வீட்டிற்கு வந்தார். ஆடுகளை வீட்டின் அருகே மேய்ச்சலுக்கு அழைத்து சென்றார். வெகு நேரம் ஆகியும் வீடு திரும்பாத காரணத்தால் அவரது குடும்பத்தினர், மாணவி ஆடு மேய்ச்சலுக்கு சென்ற இடத்திற்கு தேடிச்சென்றுள்ளனர்.
ஆடுகள் மட்டும் தானாக மேய்ந்து கொண்டிருக்க மாணவியின் உடல் முட்புதருக்குள் கிடந்துள்ளது. அவரது ஆடைகள் கிழிக்கப்பட்டிருந்தது. இதுகுறித்த தகவலின்பேரில் சிலைமான் போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று உடலைக் கைப்பற்றி மதுரை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.
மாவட்ட எஸ்.பி விஜயேந்திர பிதாரி சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை மேற்கொண்டார். முதற்கட்ட விசாரணையில், அடையாளம் தெரியாத நபர்களால் மாணவி, பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, துப்பட்டாவால் கழுத்தை நெரித்துக் கொலை செய்யப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.
சம்பவம் நிகழ்ந்த பகுதியில் பல தொழிற்சாலைகள் இயங்கி வருவதால், அவற்றில் பணிபுரியும் நபர்கள் யாரேனும் இதில் ஈடுபட்டார்களா என்பது குறி்த்து விசாரித்து வருகின்றோம் என்று போலீசார் கூறி வருகின்றனர்.
அங்கு வந்த மர்ம நபர்கள் சிலர், மாணவியை முள்காட்டிற்குள் துாக்கி சென்று பாலியல் பலாத்காரம் செய்தனர். வெளியில் தெரிந்தால் விபரீதம் ஆகும் என நினைத்து அவர் கழுத்தை நெரித்து கொலை செய்து தப்பினர். எஸ்.பி., விஜயேந்திரபிதரி விசாரணை நடத்தினார். தனிப்படை அமைத்து குற்றவாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.