நாளை முதல் சத்துணவு ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்!
சென்னை: அரசு தரப்பில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு எட்டப்படாததால் நாளை முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் திட்டமிட்டப்படி நடைபெறும் என்று தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் அறிவித்துள்ளது.
தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க மாநில தலைவர் கி.பழனிச்சாமி நேற்று சென்னை திருவல்லிக்கேனியில் உள்ள தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தில் செய்தியாளர்களிடம் கூறுகையில், "சத்துணவு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வரும் ஓய்வூதியத்தை ரூ. ஆயிரத்தில் இருந்து ரூ.3,500 ஆக அதிகரிக்கவேண்டும், சம்பளத்தை உயர்த்த வேண்டும், சத்துணவு மையங்களில் காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட 34 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 15-ந்தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்திருந்தோம்.
இதனையடுத்து நேற்று தலைமை செயலகத்தில் அமைச்சர்கள் பா.வளர்மதி, பழனியப்பன், காமராஜ் தலைமையிலான குழுவினரிடம் எங்களது சங்கங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் 18 பேர் சந்தித்து பேசினோம். அரசு மற்றும் ஊழியர்கள் என இருதரப்பு பேச்சுவார்த்தை மதியம் 1 மணி முதல் 3 மணி வரையிலான 2 மணி நேரம் நடைபெற்றது.

பேச்சுவார்த்தையில் மலைப்படி, குளிர்காலப்படி, சமையலர், உதவியாளர்களுக்கு பதவி உயர்வு, மகப்பேறு விடுப்பு 3 மாதத்தில் இருந்து 6 மாதமாக அதிகரித்தல், சில்லறை செலவினத்தை ரூ.20-ல் இருந்து ரூ.50 ஆக உயர்த்துதல் உள்ளிட்ட ஒருசில கோரிக்கைகளை அரசு தரப்பில் ஏற்றுக்கொண்டு மீதம் உள்ள கோரிக்கைகளை ஏற்க மறுத்துவிட்டார்கள்.
ஆனால் எங்களுடைய பிரதான கோரிக்கைகளான ஊதிய உயர்வு, ஓய்வூதியம் உள்ளிட்டவற்றை அரசு தரப்பில் ஏற்க மறுத்துவிட்டார்கள். பேச்சுவார்த்தையில் சுமுகமான முடிவு எட்டப்படவில்லை. கோரிக்கையை ஏற்காததற்கு சத்துணவு ஊழியர்கள் பகுதி நேர ஊழியர்கள்தானே என்று காரணம் கூறுகிறார்கள். அரசு தரப்பில் இருந்து தெரிவிக்கப்படும் இந்த கருத்து ஏற்றுக் கொள்ளக்கூடியது அல்ல.
ஆகவே மீண்டும் எங்களை அழைத்து அரசு எங்களுடைய பிரச்சினைகளை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க நடவடிக்கை எடுக்கவேண்டும். இல்லையென்றால் நாங்கள் ஏற்கனவே அறிவித்ததுபோன்று நாளை (புதன்கிழமை) முதல் திட்டமிட்டப்படி காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவோம். தமிழகம் முழுவதும் மொத்தம் 41 ஆயிரம் சத்துணவு மையங்கள் உள்ளன.
இதில் ஒரு லட்சத்து 20 ஆயிரம் ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள். இவர்களில் எங்களது சங்கங்களை சேர்ந்த 80 ஆயிரம் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவார்கள்," என்றார்.












Click it and Unblock the Notifications