மடிப்பாக்கம் வேலாயுதத்தின் ஜி.டி.வியை வாங்கினார் ஓ.பி.எஸ்.. விரைவில் அம்மா டிவியாக அறிமுகம்!
மடிப்பாக்கம் வேலாயுதம் என்பவருக்கு சொந்தமான ஜிடிவியை ஓ.பன்னீர்செல்வம் விலைக்கு வாங்கியுள்ளார்.
சென்னை: மடிப்பாக்கம் வேலாயுதம் என்பவருக்கு சொந்தமான ஜிடிவியை ஓ.பன்னீர்செல்வம் விலைக்கு வாங்கியுள்ளார். இது விரையில் அம்மா டிவியாக வலம் வரும் கூறப்படுகிறது.
தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு அரசியல் கட்சியும் தங்களின் கட்சியை மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் ஒரு டிவி சேனலை நடத்தி வருகிறது. திமுகவுக்கு கலைஞர் டிவியும் சன் டிவியும் ஆதரவாக உள்ளன. இதேபோல் அதிமுகவுக்கு ஜெயா டிவியும் தேமுதிகவுக்கு கேப்டன் டிவியும் காங்கிரஸ்க்கு வசந்த் மற்றும் மெகா டிவிகளும் பாஜகவுக்கு லோட்டஸ் டிவியும், மதிமுகவுக்கு மதிமுகமும், விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு வெளிச்சம் டிவியும் உள்ளன.
அதிமுகவில் பிளவு ஏற்பட்டு ஓபிஎஸ் தனியாக பிரிந்து செயல்பட்டு வருகிறார். தற்போது அதிமுக (புரட்சித் தலைவி அம்மா) என்ற கட்சியின் பெயரில் இயங்கும் ஓபிஎஸ் அணி தங்களின் நிலைபாட்டை மக்களிடம் கொண்டு சேர்க்க விரைவில் அம்மா டிவி என்ற பெயரில் தொலைக்காட்சி சேனல் ஒன்று தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
அனைத்து கட்டமைப்புகளுடன் ஒளிபரப்புக்கு ரெடியாக உள்ள ஒரு தொலைக்காட்சி நிறுவனத்திடம் இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்பட்டது. இந்நிலையில் மடிப்பாக்கம் வேலாயுதம் நடத்தி வந்த ஜி டிவியை முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வாங்கிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த டிவி விரைவில் அம்மா டிவி என பெயர் மாற்றம் செய்யப்பட்ட விரைவில் ஒளிபரப்பு செய்யப்படும் என கூறப்படுகிறது. அனேகமாக ஆர்கே நகர் தேர்தல் முடிவுகளை ஒளிபரப்பும் வகையில் இந்த சேனல் தொடங்கப்படும் எனத் தெரிகிறது.