அப்பல்லோவில் ஜெயலலிதாவை பார்த்தவர்கள் யார்?- சசிகலா பரபரப்பு வாக்குமூலம்

சென்னை: ஜெயலலிதா அப்பல்லோவில் சிகிச்சை பெற்று வந்த போது பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ், ஓபிஎஸ், தம்பித்துரை ஆகியோர் பலமுறை பார்த்தனர் என்று ஆறுமுகசாமி ஆணையத்தில் தாக்கல் செய்துள்ள பிரமாணப்பத்திரத்தில் சசிகலா கூறியுள்ளார்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 2016 ஆண்டு செப்டம்பர் 22ஆம் தேதியன்று உடல்நலக்குறைவினால் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 75 நாட்கள் சிகிச்சை அளித்தும் பலனின்றி டிசம்பர் 5ஆம் தேதியன்று மரணமடைந்தார்.
மருத்துவமனையில் ஜெயலலிதா இருந்த போது செய்தியாளர்களிடம் பேசிய மதுசூதனன், சி ஆர் சரஸ்வதி ஆகியோர், ஜெயலலிதா நன்றாக இருக்கிறார் இட்லி சாப்பிட்டார் என்று கூறினார். பின்னர் அதெல்லாம் பொய் என்று தகவல் வெளியானது.

ஓபிஎஸ் தர்மயுத்தம்
அப்பல்லோவில் இருந்த 75 நாட்களும் யாரையுமே சசிகலா பார்க்க விடவில்லை என்றும் அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாகவும் ஓபிஎஸ் தர்மயுத்தம் நடத்தினார். ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள மர்மத்தை விசாரிக்க முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணைக்கமிஷன் அமைத்து உத்தரவிட்டார். இந்த ஆணையத்தில் ஆஜராகி பலரும் வாக்குமூலம் அளித்து வருகின்றனர்.

சசிகலா வாக்குமூலம்
ஜெயலலிதா மரணம் பற்றி விசாரிக்கும் நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தில் சசிகலா நேரில் ஆஜராகவில்லை அதற்கு பதிலாக பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்துள்ளார். அதில் ஜெயலலிதா கடும் மன அழுத்தத்தில் இருந்தார். சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்டு விடுவோமா என்றும் வேதனை பட்டார் ஜெயலலிதா அதுவே அவரது உடல்நிலையை பாதித்தது என்று சசிகலா கூறியுள்ளார்.

மன அழுத்தம் அதிகரிப்பு
கடந்த 2014ஆம் ஆண்டு சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூரு சிறையில் இருந்த போதே ஜெயலலிதாவிற்கு மனதளவில் வேதனை அதிகரித்தது. ரத்த சர்க்கரை அளவும் அதிகரித்தது. விடுதலையாகி வந்த பின்னரும் பாதிப்பு தொடர்ந்தது. எனவேதான் ஆர்.கே. நகர் தேர்தலில் போட்டியிட தீர்மானித்தார் என்றும் சசிகலா தனது வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.

மாத்திரை சாப்பிட்ட ஜெ
கடந்த 2016ஆம் ஆண்டு தேர்தல் வெற்றிக்குப் பிறகும் ஜெயலலிதா உடல் பாதிக்கப்பட்டது. நீரிழிவு மருத்துவர், தோல்நோய் மருத்துவர்கள் பரிசோதனை செய்து குறைந்த அளவிலான ஸ்டீராய்டு மாத்திரைகளை அளித்தனர். செப்டம்பர் 16ஆம் தேதிவரை மாத்திரை சாப்பிட்டார். 19ஆம் தேதியன்று காய்ச்சல் ஏற்பட்டது என்றும் சசிகலா தனது பிரமாணப்பத்திரத்தில் கூறியுள்ளார்.

உடல்நிலை பாதிப்பு
செப்டம்பர் 21ஆம் தேதியே உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்தது. மருத்துவமனைக்கு அழைத்தும் வர மறுத்தார். 22ஆம் தேதியன்று அவர் மிகவும் சோர்வாக காணப்பட்டார். இரவு 9.30 மணியளவில் உடல்நிலை பாதிப்படையவே உறவினர் டாக்டர் சிவகுமாருக்கு போன் செய்தேன். அவர் உடனடியாக அப்பல்லோ மருத்துவமனையில் டாக்டர் விஜயகுமார் ரெட்டிக்கு போன் செய்து இரண்டு ஆம்புலன்ஸ்களை வரவழைத்தார். உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம் என்று சசிகலா கூறியுள்ளார்.

ஓபிஎஸ், தம்பித்துரை பார்த்தனர்
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஜெயலலிதாவை செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் ஓபிஎஸ், தம்பித்துரை பார்த்தனர். பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவும் பார்த்தார் என்றும் சசிகலா குறிப்பிட்டுள்ளார். ஜெயலலிதாவின் உடல்நிலை சரியான பின்னரும் சில தினங்கள் மருத்துவமனையில் ஓய்வெடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறினர் என்றும் சசிகலா தனது பிரமாணப்பத்திரத்தில் குறிப்பிட்டுள்ளார்.

ஜெயலலிதாவை பார்க்கவில்லை
ஜெயலலிதாவிற்கு சிகிச்சையளித்த மருத்துவர்கள், கைரேகை பதிவு பெற்ற டாக்டர் பாலாஜி, எம்பார்மிங் செய்த டாக்டர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரிடம் நோட்டீஸ் அனுப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. ஜெயா டிவி சிஇஓ விவேக் ஜெயராமன் கடந்த வாரம் விசாரணைக்கு ஆஜரானார். அப்போது, மருத்துவமனையில் ஜெயலலிதா இருந்த போது பார்க்கவில்லை எனவும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த போது தாம் வெளிநாட்டில் இருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

உண்மை எது பொய் எது?
ஜெயலலிதா இட்லி சாப்பிட்டார் என்று கூறியது எல்லாம் பொய். அவரை யாரும் பார்க்கக்கூட அனுமதிக்கப்படவில்லை. மக்களிடம் பொய் சொன்னதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம் என்று திண்டுக்கல் சீனிவாசன் கூறியிருந்தார். அதே போல மதுசூதனனும் ஜெயலலிதாவை பார்க்கவில்லை என்று கூறினார். இந்த நிலையில் ஆறுமுகம் சாமி ஆணையத்தில் சசிகலா அளித்துள்ள வாக்குமூலம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!