முதல்வரான பின்னர் முதன்முறையாக பெரியகுளம் வந்தார் ஓ.பி.எஸ்
மதுரை: முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் இன்று தனது சொந்த ஊரான பெரியகுளத்திற்கு வந்தார். இரண்டாவது முறையாக தமிழக முதல்வரான பின்னர் முதன்முறையாக அவர் தனது தொகுதிக்கும், சொந்த ஊருக்கும் வந்தார் பன்னீர் செல்வம்
முதல்வர் என்ற பந்தா எதுவும் இன்றி அவர் இன்று தனது தொகுதி மக்களை சந்தித்தார். ஜெயலலிதா சிறை சென்றபோது உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அவர் நிதி உதவிகளை வழங்கினார்.

முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்றிரவு சென்னையில் இருந்து விமானம் மூலம் நேற்றிரவு 8.20 மணிக்கு திடீரென மதுரை வந்தார். அவரை கட்சி நிர்வாகிகள், அதிகாரிகள் வரவேற்றனர்.
அமைச்சர் செல்லூர் ராஜு, மேயர் ராஜன் செல்லப்பா, கலெக்டர் சுப்பிரமணியன், காவல்துறை ஆணையர் சஞ்சய் மாத்தூர் உள்பட அதிகாரிகள் மற்றும் கட்சி நிர்வாகிகள் வரவேற்றனர். பின்னர் அவர் சொந்த ஊரான பெரியகுளத்திற்கு காரில் சென்றார்.
சொத்துக் குவிப்பு வழக்கில் அ.தி.மு.க பொது செயலாளர் ஜெயலலிதா சிறையில் அடைக்கப்பட்டத்தையடுத்து கட்சியினர் பலர் தற்கொலை செய்து கொண்டனர். அவர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவி வழங்கப்படும் என ஜெயலலிதா அறிவித்தார்.அதன்படி, தேனி மாவட்டத்தில் உயிரிழந்த கட்சியினர் குடும்பத்தினர்களுக்கு நிதி வழங்க முதல்வர் வந்தார்.
இன்று (1ஆம் தேதி) காலை தனது மகன்களான ரவீந்திரநாத் குமார், ஜெய ப்ரதீப் ஆகியோருடன் கள்ளிப்பட்டியிலுள்ள கைலாச நாதர் கோவிலுக்கு சென்று வழிபட்டார்.
அதைத் தொடர்ந்து தனது தொகுதியான போடிக்கு சென்ற ஓ.பன்னீர் செல்வம், ஜெயலலிதாவுக்காக உயிர்நீத்த ஜோதிமணி என்பவரின் குடும்பத்தினரிடம் ரூ.3 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார்.
அதைத் தொடர்ந்து, சின்னமனூர், கண்டமனூர் அருகேயுள்ள ராமச்சந்திரபுரம் பகுதிகளுக்கு சென்று அங்கு உயர்நீத்தவர்களின் குடும்பத்திற்கும் நிதியுதவியை வழங்கினார்.
இதை முடித்துக் கொண்டு மதுரைக்கு சென்ற ஓ.பன்னீர்செல்வம், அங்கிருந்து சென்னை புறப்பட்டுச் சென்றார்.
இதற்கிடையே, தேனி மாவட்டத்தில் ஜெயலலிதாவுக்காக உயிர் நீத்த மற்றவர்களின் குடும்பத்திற்கு அந்தப் பகுதி அ.தி.மு.க. நிர்வாகிகள் மூலம் நிதியுதவி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வாரம் தேவர் ஜெயந்தி விழாவை ஒட்டி தங்க கவசத்தை எடுப்பதற்காக மதுரை சென்றார் ஓ. பன்னீர் செல்வம், தொடர்ந்து இரு தினங்களுக்கு முன்பு பசும்பொன் சென்று தேவர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்.
இந்த நிலையில் இன்று தனது சொந்த ஊரான பெரியகுளத்தில் நிதி உதவி வழங்கினார் முதல்வர் ஓ. பன்னீர் செல்வம். முதல்வர் என்ற பந்தா எதுவும் இன்றி அவர் மக்களை சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications