சசிகலா நெருக்கடி- முதல்வர் ஓபிஎஸ்-ன் 25 திட்டங்கள் தொடக்க விழா நிகழ்ச்சி ரத்து?
சசிகலாவின் நெருக்கடியால் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தம்முடைய நிகழ்ச்சிகளை ரத்து செய்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சென்னையில் 25 நலத் திட்டங்களை காணொளி மூலம் தொடங்கி வைக்க இருந்தார் முதல்வர் ஓ. பன்னீர
சென்னை: முதல்வர் பதவியில் உட்கார்ந்துவிடுவது என கங்கணம் கட்டிக் கொண்டிருக்கும் சசிகலாவின் நெருக்கடியால் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தின் நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தலைமை செயலக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், சசிகலா தரப்புடன் ஆலோசனை எதுவும் செய்யாமல் செயல்பட்டு வருகிறார். இது மன்னார்குடி தரப்பை கடும் ஆத்திரம் அடைய வைத்துள்ளது.
முதல்வர் ஓ பன்னீர்செல்வத்துக்கு போட்டியாக சசிகலாவும் அறிக்கைகளை விட்டு வருகிறார். தம்முடைய அறிக்கைகளைத்தான் முதலில் அனுப்ப வேண்டும் எனவும் சசிகலா உத்தரவிட்டுள்ளாராம்.
இதேபோல் தாம் விரைவில் முதல்வர் பதவி ஏற்க இருப்பதால் எந்த ஒரு நலத்திட்டத்தையும் தொடங்கி வைக்க கூடாது என முதல்வர் ஓ பன்னீர்செல்வத்துக்கு சசிகலா தரப்பு கடும் நெருக்கடி கொடுத்து வருகிறது. இதனால் சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் காணொளி மூலமாக 25 நலத் திட்டங்களை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சியை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் ரத்து செய்திருப்பதாக கூறப்படுகிறது.