சட்டசபை இன்று கூடுகிறது.. வரிந்து கட்டும் எதிர் கட்சிகள்... முக்கிய பிரச்சனைகளை எழுப்ப திட்டம்!
சென்னை: தமிழக சட்டசபையின் இந்த நிதியாண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று தாக்கல் செய்கிறார். இதனிடைய சுவாதி கொலை வழக்கு, டாஸ்மாக் விவகாரம், பாலாறு பிரச்சனை உள்ளிட்ட முக்கிய பிரச்சனைகளை கிளப்பவும் எதிர்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.
நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை தக்கவைத்துக் கொண்டது. இதையடுத்து, 15-வது சட்டசபையின் முதல் கூட்டத்தொடர், கடந்த ஜூன் 16-ம் தேதி ஆளுநர் ரோசய்யா உரையுடன் தொடங்கி 23-ம் தேதி வரை நடந்தது. பின்னர் தேதி குறிப்பிடப்படாமல் பேரவை ஒத்திவைக்கப்பட்டது.

இதையடுத்து, பட்ஜெட் கூட்டத் தொடருக்காக சட்டப்பேரவை நாளை மீண்டும் கூடுகிறது. காலை 11 மணிக்கு பேரவையில் 2016-17ம் நிதியாண்டுக்கான முழுமை யான பட்ஜெட்டை நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்கிறார். அதிமுக தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்ட இலவச கைபேசி, ஸ்கூட்டர் மானியம் உள்ளிட்டவை தொடர்பான அறிவிப்புகள் பட்ஜெட்டில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் பால் விலையை குறைப்பது, 500 டாஸ்மாக் கடைகளை மூடுவது, அரசு கல்லூரிகளில் காலியாக உள்ள விரிவுரையாளர் பணியிடங்களை நிரப்புவது, பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவது போன்றவை இடம் பெறலாம். அதேநேரத்தில் புதிய திட்டங்களுக்கான அறிவிப்புகள் பெரும்பாலும் பட்ஜெட்டில் இடம் பெறாது என்றும், 110வது விதியின் கீழ் முதல்வர் ஜெயலலிதாவே வெளியிடுவார் என்றும் அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும், மத்திய அரசு ஊழியர்களுக்கு 7வது சம்பளக் கமிஷன் ஊதியம் அறிவிக்கப்பட்டு விட்டது. தமிழக அரசு ஊழியர்களுக்கும் 7வது சம்பளக் கமிஷன் ஊதியம் வழங்கப்படும் என அதிமுக தேர்தல் அறிக்கையில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதனால், அது குறித்த அறிவிப்பையும் முதல்வர் வெளியிட வாய்ப்புள்ளது.
இந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் பிரதான எதிர்க்கட்சியான திமுகவும், அடுத்த இடத்தில் உள்ள காங்கிரசும் பல்வேறு மக்கள் பிரச்சனைகள் குறித்து குரல் எழுப்ப திட்டமிட்டுள்ளன. திருப்பூர் அருகே கன்டெய்னர் லாரியில் பிடிபட்ட ரூ.570 கோடி விவகாரம், சுவாதி கொலை, மீனவர்கள் பிரச்சனை, திருவள்ளுவர் சிலை அவமதிக்கப்பட்ட பிரச்சனை, குறிப்பாக, தமிழகத்தில் தொடர்ந்து நடைபெற்று வரும் கொடூர கொலைகள் மற்றும் கூலிப்படையினரின் அட்டகாசம் உள்பட பல பிரச்சனைகள் குறித்து கவன ஈர்ப்பு தீர்மானங்களை கொடுக்கவும் திட்டமிட்டுள்ளன.
அதே போல், ஆந்திர அரசு பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதை கண்டித்து பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற திமுக வலியுறுத்தும் என கூறப்படுகிறது. டாஸ்மாக் கடைகளால் பொதுமக்களுக்கு ஏற்படும் பாதிப்பு, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வெள்ளம் பாதித்த பல லட்சம் மக்களுக்கு இன்னும் நிவாரண உதவி கிடைக்காதது உள்ளிட்ட விவகாரங்களும் எழுப்பப்படும்.
மேலும், பிரதான எதிர்கட்சியான திமுக வெளிநடப்பு செய்யப்போவதில்லை அவையில் இருந்து கொண்ட பிரச்சனைகள் குறித்து விவாதிக்க போவதாக ஏற்கனவே கூறியுள்ளது. இதனால், இந்த கூட்டத் தொடரில் அனல் பறக்கும் விவாதங்களுக்கும், பரபரப்புக்கும் பஞ்சம் இருக்காது.












Click it and Unblock the Notifications