அமைச்சர் அலுவலகத்தில் உட்கார்ந்து வேலை பார்த்த ஓ.பன்னீர் செல்வம்... முதல்வர் அறைக்கு மாறவில்லை!
சென்னை: ஜெயலலிதா இல்லாத நிலையில் அவர் வகித்து வந்த முதல்வர் பதவியை ஏற்றதை நிச்சயமாக இன்னும் ஓ.பன்னீர் செல்வத்தால் ஜீரணிக்க முடியவில்லை என்றே தெரிகிறது. முதல்வராகப் பதவியேற்ற பின்னரும் கூட அவர் முதல்வர் அறைக்குப் போகாமல் தனது அமைச்சர் அறையில் இருந்தபடியே நேற்று முதல் பணிகளைப் பார்த்தார்.
30 அமைச்சர்கள் மற்றும் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் நேற்று பதவியேற்றுக் கொண்டனர். ஆளுநர் மாளிகையில் நடந்த எளிய பதவியேற்பு விழாவில் அனைவரும் பதவியேற்றனர்.
அழுதபடியும், வீம்பியபடியும், தொண்டைக் கமறல், இறுமல், விட்டு விட்டு வாசிப்பது, கர்ச்சீப்பால் மூக்கு, கண்களைத் துடைப்பது என்று ஒரு "ஹாஸ்ப்பிட்டல்" ரேஞ்சுக்கு நேற்றைய பதவியேற்பு விழா இருந்தது.

தலைமைச் செயலகம் வந்த அமைச்சர்கள்
பதவியேற்பு விழா முடிந்ததும் புதிய அமைச்சர்கள் அனைவரும் தலைமைச் செயலகத்திற்கு வந்தனர். அனைவரும் சோகத்துடன் காணப்பட்டனர். யார் முகத்திலும் மகிழ்ச்சி இல்லை.

பொறுப்பேற்றனர்
பின்னர் அவரவர் அலுவலகத்திற்குச் சென்று முதலில் பொறுப்புகளை ஏற்று முதல் கோப்புகளில் கையெழுத்திட்டனர்.

மூன்றே கால் மணிக்கு வந்த ஓ.பன்னீர் செல்வம்
முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் 3.15 மணிக்கு தலைமைச் செயலகம் வந்தார். வந்தவர் நேராக தனது நிதித்துறை அமைச்சர் அறைக்குப் போனார்.

ஜெ. வரும் பாதை, கார் பார்க்கிங் .. தவிர்ப்பு
ஜெயலலிதா வழக்கமாக வரும் கார்ப் பாதை, கார் நிறுத்தும் இடம் ஆகியவற்றை ஓ.பன்னீர் செல்வம் தவிர்த்து விட்டார்.

"அம்மா" அறை வேண்டாம்
அதேபோல முதல்வருக்கான அறைக்கும் அவர் போகவில்லை. ஓ.பன்னீர் செல்வத்திற்காக அந்த அறையில் ஜெயலலிதா பயன்படுத்தி வந்த சேர், டேபிள் போன்றவற்றை ஏற்கனவே அகற்றி விட்டு வேறு சேர், டேபிளைப் போட்டிருந்தனர். இருந்தும் அந்த அறைக்கு பன்னீர் செல்வம் போகவில்லை.

பழைய அறையில்
தனது பழைய அறைக்கே வந்து அங்கு முதல்வர் பொறுப்பை அவர் ஏற்றுக் கொண்டார்.

பழைய அறையில் வைத்து ஆலோசனை
அந்தப் பழைய அறைக்கு வந்து ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன், தலைமைச் செயலாளர் மோகன் வர்கீஸ் சுங்கத், உள்துறை செயலாளர் அபூர்வ வர்மா, பொதுத்துறை செயலாளர் யத்தீந்திரநாத் ஸ்வேன், முதல்வரின் செயலாளர்கள் ஷீலா பிரியா, வெங்கட்ரமணன், ராமலிங்கம், கூடுதல் செயலாளர் சுடலைக்கண்ணன் மற்றும் உயர் அதிகாரிகள் சென்று சந்தித்தனர்.

அமைச்சர்களும் சந்திப்பு
அதேபோல நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்ட அமைச்சர்களும் ஓ.பன்னீர் செல்வத்தை அவரது அறைக்கே வந்து சந்தித்து ஆலோசனை நடத்திச் சென்றனர்.












Click it and Unblock the Notifications