பன்னீர் செல்வத்தை முன்னால் விட்டு பின்னால் 'சவுண்டு' கொடுத்த 'பைலட்'!
சென்னை: முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் நிலை ரொம்ப பரிதாபம்தான். ஒரு முதல்வராக அவரால் கம்பீரமாக, அதிகார தோரணையுடன் நடக்கவே முடியவில்லை. நடக்கவும் விரும்பவில்லை.
பார்த்துப் பார்த்து அடியெடுத்து வைத்து வருகிறார் பன்னீர் செல்வம். எந்த இடத்திலும், எந்த நிலையிலும் தான் ஒரு முதல்வர் என்ற பார்வை மற்றவர்களுக்கோ தனக்கோ வந்து விடக் கூடாது என்பதில் அவர் படு கவனமாக இருக்கிறார்.
பெயர்ப் பலகை இல்லை
இன்னும் முதலமைச்சர் என்ற பெயர்ப் பலகைக்குக் கூட ஓ.பன்னீர் செல்வம் மாறவில்லை. தனது அமைச்சர் அலுவலகத்திலிருந்துதான் அவர் செயல்படுகிறார்.
தனித்துத் தெரிவதைத் தவிர்க்கும் பன்னீர் செல்வம்
அதேபோல அதிகாரிகளுடன் நடக்கும் ஆலோசனைக் கூட்டம் உள்ளிட்டவற்றிலும் தான் தனித்துத் தெரிவது போல அமருவதைக் கூடத் தவிர்க்கிறாராம் பன்னீர் செல்வம்.
அட பைலட் காருக்கு வந்த கதியைப் பாருங்க
வழக்கமாக முதல்வர் காரில் செல்கிறார் என்றால் அவரது காருக்கு முன்பு சைரன் அடித்தபடி பைலட் கார் செல்லும். ஆனால் தனக்கு பைலட் காரே தேவையில்லை என்று கூறி விட்டாராம் ஓ.பன்னீர் செல்வம்.
பின்னாடி வாங்க
இதை பாதுகாப்பு அதிகாரிகள் ஏற்காததால், அப்படியே வந்தாலும் தனக்கு முன்னால் சைரனை ஒலிக்க விட்டபடி பைலட் கார் செல்லக் கூடாது. தனது காருக்குப் பின்னால் வந்தால் போதும் என்று கூறி விட்டாராம்.
சைரனை ஆப் பண்ணுங்கப்பா
இப்படித்தான் கட்சி அலுவலகம் போயிருந்த முதல்வர் அங்கிருந்து கிளம்பியுள்ளார். அவரது உத்தரவுப்படி பைலட் கார், அவரது காருக்குப் பின்னால் கிளம்பியது. ஆனால் பழக்க தோஷத்தில் சைரனை ஒலிக்க விட்டுள்ளனர். இதையடுத்து காரை நிறுத்தச் சொன்ன ஓ.பன்னீர் செல்வம், சைரனை ஆப் செய்யும்படி சைகை காட்டி ஆப் செய்ய வைத்தாராம்.
அமைதியான நதியினிலே ஓடம்...
இதையடுத்து முதல்வரின் கார் செல்ல, சத்தம் போடாமல் பைலட் கார் பின்னால் தொடர, அமைதியான முறையில் முதல்வரின் கார் பயணம் தொடர்ந்ததாம்.