திமுக பெயரை குறிப்பிடுவதை தவிர்த்து சட்டசபை நிகழ்வுகளை (மட்டும்) கண்டித்த ஓ.பி.எஸ்.!
பன்னீர்செல்வம் இன்று அளித்த பேட்டியில் திமுகவின் சட்டசபை செயல்பாடு குறித்து எதுவும் பேசவில்லை.
சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி, ஆர்.கே.நகரில் சுற்றுப்பயணம் செய்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், பிறகு நிருபர்களிடம் பேட்டியளித்தார்.
பன்னீர்செல்வம் கூறியதாவது: நம்பிக்கை கோரும் வாக்கெடுப்பு நடைபெறுவதற்காக, சட்டமன்றம் கூடுவதற்கு முன்பிருந்து சட்டசபை உறுப்பினர்கள் அடைத்து வைக்கப்பட்டிருந்தனர்.

நம்பிக்கை வாக்கெடுப்புக்காக, ஆளுநர் 15 நாட்கள் அவகாசம் கொடுத்தார். எனவே இந்த கால அவகாசத்தை பயன்படுத்தி, எம்.எல்.ஏக்கள் வாக்காளர்களின் கருத்துக்களை கேட்டிருக்க வேண்டும்.
அவர்கள் விருப்பப்படி வாக்களிக்க வகை செய்யுங்கள் என்று சட்டசபையில் கோரிக்கை விடுத்தேன். அதை சபாநாயகர் ஏற்கவில்லை. அடைக்கப்பட்டவர்களை அப்படியே சட்டசபையில் கூட்டி வந்து வாக்களிக்க வைத்தனர். இது ஜனநாயக விரோதமாகும். இப்போது தொகுதிகளில் அந்த எம்.எல்.ஏக்களுக்கு எப்படி மரியாதை கிடைக்கிறது என்பதை கண்கூடாக பார்க்கிறோம் என்றார்.
பேட்டியில் திமுகவின் சட்டசபை செயல்பாடு குறித்து எதுவும் பேசவில்லை. சபாநாயகர் மீது திமுக நம்பிக்கையில்லாத தீர்மானம் கொண்டுவந்துள்ளது குறித்த கேள்விக்கும், ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு நிலைப்பாடு இருக்கும் என்று கூறி நேரடியாக பதிலளிப்பதை தவிர்த்தார் ஓ.பன்னீர்செல்வம்.












Click it and Unblock the Notifications