ஒரு ரைடா.. ரெண்டு ரைடா.. 3 ரைடா.. என்னத்த சொல்ல.. ஓ எஸ் மணியன்
மயிலாடுதுறை: ஒரு ரைடா, இரண்டு ரைடா, மூன்று ரைடா தொடர்ந்து சோதனை செய்துக் கொண்டு இருக்கிறார்கள். அரசியல் காழ்ப்புணர்ச்சி என்பதைத் தவிர வேறு எதுவும் இல்லை என மயிலாடுதுறையில் முன்னாள் அமைச்சர் ஓ எஸ் மணியன் பேட்டி அளித்துள்ளார்.
மயிலாடுதுறை மாவட்டம் வடகரையில் இளையாளுர் ஊராட்சி மன்ற தலைவர் சுக்ரியா பர்வீன் தமிமுல் அன்சாரியின் ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் முன்னாள் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ எஸ் மணியன் மற்றும் மாவட்ட செயலாளர் எஸ் பவுன்ராஜ் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

முன்னாள் அமைச்சர்
தொடர்ந்து சிறப்பு உரையாற்றிய முன்னாள் அமைச்சர் ஓ எஸ் மணியன் ஆம்புலன்ஸ் வழங்கி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது : கடந்த ஆட்சிக் காலத்தில் எதிர்க்கட்சித் தலைவராகவும் தற்போது முதலமைச்சராகவும் உள்ள மு.க.ஸ்டாலின் மழையால் ஏற்பட்ட குருவை சாகுபடி பாதிப்புகளை பார்வையிட்டார்.

பயிர்கள்
இதையடுத்து முழுவதுமாக பாதிக்கப்பட்டுள்ள இந்தப் பயிர்களுக்கு ஏக்கர் ஒன்றிற்கு 50 ஆயிரம் வீதம் அரசு இழப்பீடு தர வேண்டும் என அப்போது வலியுறுத்தி இருந்தார். ஆனால் தற்போது நூற்றுக்கணக்கான கிராமங்கள் நிவாரணத் தொகை வழங்குவதில் விடுபட்டு பூஜ்ஜியம் எனக் குறிப்பிட்டு இழப்பீடு இல்லை என்று தெரிவித்திருப்பது விவசாயிகளிடையே மிகுந்த வேதனை அளிக்கக் கூடியதாக உள்ளது.

விவசாயிகள்
இந்த பயிர் காப்பீட்டு திட்டத்தில் விவசாயிகள் முன்னிலையில் அதிகாரிகள் அறுவடை பரிசோதனை செய்தால் கண்டிப்பாக அது வெளிப்படைத்தன்மையாக இருக்கும். 100 சதவீத விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு வழங்க வேண்டும் என்பதே தங்களது கோரிக்கையாக உள்ளது என அவர் தெரிவித்தார்.

விஜயபாஸ்கர்
முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை குறித்து கேள்வி கேட்டபோது ஒரு ரைடா, இரண்டு ரைடா, மூன்று ரைடா தொடர்ந்து சோதனை பண்ணிக்கொண்டு இருப்பதாகவும் , அரசியல் காழ்ப்புணர்ச்சி என்பதைத் தவிர வேறு எதுவும் இல்லை என்றும் அவர் கூறினார்.

உச்சநீதிமன்றம்
அஇஅதிமுக உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பையும் பெற்று ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் என நியமனம் பெற்று தேர்தலில் போட்டியிடுபவர்களுக்கு சின்னம் ஒதுக்கீடு செய்யும் அங்கீகாரம் பெற்று நாடாளுமன்ற தேர்தல் , சட்ட மன்ற தேர்தல் என பல தேர்தல்களில் எதிர்கொண்டுள்ளதாகவும் , எனவே கைப்புண்ணுக்கு கண்ணாடி தேவையில்லை எனவும் கூறினார். சசிகலா மீது அதிமுக வழக்கு தொடரவில்லையே என்பது குறித்த கேள்விக்கு 72 மணி நேரம் தான் ஆகியிருக்கிறது என அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications