அரசு கேபிளில் திடீரென ஓடிய 'அந்த மாதிரி' படம்.. தர்மசங்கடமாகி போன தருமபுரி!
தருமபுரி: தருமபுரியில் அரசு கேபிள் இணைப்பில் தனியார் சேனல் ஒன்றில் ஆபாச படம் ஒளிபரப்பாகியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சம்பவம் குறித்து பொதுமக்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தாசில்தார் விளக்கமளித்துள்ளார் என தினமலர் செய்தி வெளியிட்டிருக்கிறது.

நகரங்களில் இருப்பதை போன்று கிராமங்களில் பெரும்பாலும் டிடிஎச்(DTH) கனெக்ஷன் இருப்பதில்லை. பெரும்பாலும் கேபிள்கள்தான் டிவிக்கான இணைப்பை கொடுக்கின்றன. இதில் அரசு கேபிள் சார்பில் குறைந்த விலையில் கனெக்ஷன் கொடுக்கப்பட்டு வருகிறது. விலையும் குறைவு, அதிக சேனல்கள் வரும் என்பதால் மக்களுக்கும் இது பயனுள்ளதாக இருக்கிறது. மறுபுறம் கேபிளில் புதிய சேனல்கள் இயங்கி வருகின்றன.
இந்த சேனல்கள் உள்ளூர் சேனல்களாக இருக்கின்றன. பெரும்பாலும் புதிய திரைப்படங்களை போட்டுவிட்டு மக்களை கவர்ந்து வருகின்றன. எனவே மக்களுக்கும் உள்ளூர் சேனல்கள் மீது ஆர்வம் இருக்கிறது. சீரியல் மற்றும் செய்திகளை பார்க்க மற்றும் பொதுவான சேனல்களை வைத்துக்கொண்டு பெரும்பாலும் உள்ளூர் சேனல்களையே மக்கள் விரும்பி பார்த்து வருகின்றனர். இப்படியான சேனல் ஒன்றுதான் நேற்று வேண்டாத வேலையை பார்த்துவிட்டிருக்கிறது.
வழக்கம்போல, நேற்று தனியார் சேனலை மாற்றியபோது அதில் ஆபாச படம் ஒடிக்கொண்டிருந்திருக்கிறது. இதைப்பார்த்த பெற்றோர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். உடனடியாக சம்பவம் குறித்து அக்கம் பக்கம் விசாரித்திருக்கிறார்கள். எல்லோர் வீட்டிலும் சொல்லி வைத்தார் போல அந்த குறிப்பிட்ட தனியார் சேலனில் மட்டும் ஆபாசப்படம் ஓடியுள்ளது. இதனையடுத்து சம்பவம் குறித்து உள்ளூர் கேபிள் டிவி நிர்வாகத்திற்கு புகார் அளித்துள்ளனர்.
புகாரின் அடிப்படையில் விசாரணை நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தருமபுரி அரசு கேபிள் டிவி தாசில்தார் கூறுகையில், "இந்த சேனல் சேலம் மாவட்டத்தை சேர்ந்தது. புகார் வந்ததை தொடர்ந்து சேனல் ஒளிபரப்பு நிறுத்தப்பட்டிருக்கிறது. விசாரணையும் நடைபெற்ற வருகிறது" என்று தெரிவித்திருப்பதாக தினமலர் கூறியுள்ளது. இந்த சம்பவம் தருமபுரி மாவட்டத்தில் சலசலப்பை கிளப்பியிருக்கிறது.
பொது தளத்தில் இதுபோன்று ஆபாச படங்கள் ஒளிபரப்பப்படுவது இது முதல் முறை கிடையாது. சமீபத்தல் கேரளாவில் பேருந்து நிலையம் ஒன்றில் வைக்கப்பட்டிருந்த டிவியில் ஆபாச படங்கள் ஒளிபரப்பாகியிருக்கிறது. தற்போது இந்த சமாச்சாரத்தில் தருமபுரியும் சிக்கியிருக்கிறது.
ஆபாசப்படம் என்பது பாலியல் கல்வி என பலரும் தவறாக புரிந்துக்கொண்டிருக்கின்றனர். பாலுணர்வு மரபியல் ரீதியாக எல்லா உயிர்களுக்கும் இருக்கும் இயல்பான குணம். அது தேவையான நேரத்தில் வெளிப்படும். சந்தேகங்கள் இருப்பின் மருத்துவரை அணுகுவது சிறந்தது. அதை தவிர்த்து சந்தேகங்களுக்கு தீர்வாக ஆபசப்படங்களை பார்ப்பது என்பது சுயசிந்தனையை மழுங்கடிக்கும் செயல் என்றே மனநல மருத்துவர்கள் கூறுகின்றனர்.
ஆபாசப்படங்களை பார்ப்பவர்களை விட, அதை பார்க்காதவர்களே இயல்பான வாழ்க்கையை திருப்தியாக வாழ்கின்றனர். மாறாக படத்தை பார்ப்பவர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருக்கிறார்கள். அது யதார்த்த வாழ்க்கையில் நிறைவேறவில்லை என்று புரியும்போது, மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகிவிடுகின்றனர் என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.












Click it and Unblock the Notifications