தமிழகத்துக்கு வெள்ள நிவாரண நிதியாக ரூ 5 கோடி... ஒடிஷா முதல்வர் நவீன்பட்நாயக்
சென்னை: கனமழை வெள்ளத்தில் சிக்கியுள்ள தமிழகத்துக்கு ரூ.5 கோடி வழங்கப்படும் என்று ஒடிஷா முதல்வர் நவீன்படாயக் அறிவித்துள்ளார்.
தமிழகத்தின் வடபகுதி வெள்ளத்தில் சிக்கித் தவித்த நிலையில் ரூ.5 கோடி நிதி உதவி வழங்கப்படும் என்று கர்நாடகா முதல்வர் சித்தராமையா அறிவித்தார். அதைத் தொடர்ந்து டெல்லி முதல்வர் கேஜ்ரிவாலும் தமிழகத்துக்கு உறுதுணையாக இருப்போம் என்றார்.
பீகார் முதல்வர் நிதிஷ்குமார் நேற்று தமிழகத்துக்கு ரூ5 கோடி வழங்குவதாக அறிவித்தார். அம்மாநில துணை முதல்வர் தேஜஸ்வி தமது முதல் மாத ஊதியத்தை வழங்குவதாக கூறினார்.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஒடிஷா முதல்வர் நவீன் பட்நாயக் முதல்வர் ஜெயலலிதாவுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசி மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் தமிழக அரசுக்கு அனைத்து வகை ஆதரவையும் வழங்குவோம் என்று உறுதி அளித்தார்.
இயற்கை பேரிடர் மீட்பு நடவடிக்கைகளில் ஒடிஷாவுக்கு அதிக அனுபவம் உள்ளது என்று குறிப்பிட்ட நவீன் பட்நாயக், அந்த அனுபவத்தின் அடிப்படையில் தமிழகத்துக்கு அனைத்து உதவிகளையும் அளிக்க முன்வருவதாக கூறியிருந்தார்.
இதனிடையே இன்று தமிழகத்துக்கு வெள்ள நிவாரண நிதியாக ரூ.5 கோடி வழங்கப்படும் என்று ஒடிஷா முதல்வர் நவீன்பட்நாயக் அறிவித்துள்ளார்.