ஓடும் காரில் பெண் டாக்டரை பலாத்காரம் செய்ய முயற்சி.. சென்னையில் பரபரப்பு சம்பவம் #ola
சென்னை: சென்னையில் கால் டாக்சியில் பெண் மருத்துவரை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை, ஈஞ்சம்பாக்கத்தைச் சேர்ந்த அந்த பெண் மருத்துவருக்கு வயது 26. அண்ணா நகர் தனியார் மருத்துவமனையில் பணிபுரிகிறார். வழக்கம்போல் ஞாயிற்றுக்கிழமை இரவு பணிக்கு செல்வதற்காக ஓலா கால் டாக்சிக்கு பதிவு செய்து வரவழைத்து காரில் புறப்பட்டுள்ளார். வீட்டில் இருந்து புறப்பட்ட சிறிது நேரத்தில் விஜிபி அமைதி கோயில் அருகே கார் நிறுத்தப்பட்டது. காருக்குள் 2 நபர்கள் ஏறியுள்ளனர். அப்போது அதிர்ச்சியாகி கால் டாக்சி ஓட்டுநரிடம் கேட்க, அவர்கள் இருவரும் தனது நண்பர்கள் என்றும் சிறிது தூரத்தில் இறங்கிவிடுவார்க என்றும் கூறியுள்ளார் டிரைவர்.

இதில் சந்தேகம் அடைந்த பெண் மருத்துவர் அதே பகுதியில் உள்ள தனது நண்பருக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்துள்ளார். இதனிடையே காரை வேகமாக இயக்கி, வேறு திசைக்கு திருப்பியோடு, அந்த பெண் மருத்துவரிடம் தவறாக நடக்க முயன்றுள்ளனர்.
அதிவேகமாக சென்ற காரில் இருந்து பெண்ணின் அலறல் சத்தம் கேட்டதையடுத்து, பின்னால் வந்த காரில் இருந்தவர்கள் அந்த கால் டாக்சியை விரட்டிச் சென்று நீலாங்கரை அருகே மடக்கி பிடித்ததாக கூறப்படுகிறது. பெண் மருத்துவரின் நண்பரும் நீலாங்கரை போலீசாருக்கு தகவல் தெரிவித்திருந்ததால், ரோந்து பணியில் இருந்த போலீசார் விரைந்து வந்து கால் டாக்சி டிரைவர் வெங்கடேசனை கைது செய்தனர். மற்ற இருவரும் தப்பியோடியுள்ளனர்.
போலீசார் விசாரணையையடுத்து சக்தி, மருது ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர். அச்சரப்பாக்கத்தைச் சேர்ந்த வெங்கடேசன் கொட்டிவாக்கத்தில் வசித்து வந்துள்ளார். இவரது உறவினர்கள் சக்தி, மருது ஆகியோருடன் சேர்ந்து இந்த செயலில் ஈடுபட்டுள்ளார்.
கால் டாக்சி ஓட்டுநர் வாடிக்கையாளரை தவிர வேறு யாரையும் காரில் ஏற அனுமதிக்கக் கூடாது என்பது விதிமுறை, எனவே ஓட்டுநர் வெங்கடேசனை உடனடியாக பணி நீக்கம் செய்துவிட்டோம் என்று ஓலா விளக்கம் அளித்துள்ளது.












Click it and Unblock the Notifications