திருவேற்காடு பிரசாதத்தோடு ஜெ.வைப் பார்க்க வந்த சச்சு, வெண்ணிற ஆடை நிர்மலா!
சென்னை: திருவேற்காடு கருமாரியம்மன் கோவில் பிரசாதத்தோடு உடல் நிலை சரியில்லாத தமிழக முதல்வரை பார்க்க அப்போலோ மருத்துவமனைக்கு வந்த நடிகைகள் சச்சுவையும், வெண்ணிற ஆடை நிர்மலாவையும் போலீசார் தடுத்து நிறுத்தினர்.
சென்னை அப்போலோ மருத்துவமனையில் தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த ஒரு வாரமாக சிகிச்சை பெற்று வருகிறார். அவரை சந்தித்து உடல் நலம் பற்றி விசாரிக்க பழம்பெரும் நடிகைகளான சச்சு மற்றும் வெண்ணிற ஆடை நிர்மலா ஆகியோர் மருத்துவமனைக்கு வந்தனர். அவர்களை வாசலிலேயே போலீசார் தடுத்து நிறுத்தி உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை.

இதனையடுத்து, "எங்களை உள்ளே விடாவிட்டாலும் பரவாயில்ல. அவங்களுக்காக நாங்க திருவேற்காடு கோவிலுக்கு சென்று வந்தோம். இந்த பிரசாதத்தை நீங்களே கொடுத்துடுறீங்களா" என்று சச்சுவும் வெண்ணிற ஆடை நிர்மலாவும் கேட்டனர். அதனை வாங்க போலீசார் மறுத்துவிட்டனர். மேலும், இதையெல்லாம் மேலிடத்தில்தான் கேட்க வேண்டும் என்று பதில் அளித்துள்ளனர்.
பின்னர், மருத்துவமனையின் வாசலில் நின்றிருந்த அதிமுக செய்தித் தொடர்பாளர் சி.ஆர்.சரஸ்வதியிடம் சிறிது நேரம் பேசிவிட்டு சச்சுவும் வெண்ணிற ஆடை நிர்மலாவும் காரில் ஏறி புறப்பட்டனர்.












Click it and Unblock the Notifications