2வதாகவும் பெண் பிறந்ததால் சோகம்... பேத்தியை விஷம் வைத்துக் கொன்ற பாட்டி கைது
தர்மபுரி: தர்மபுரியில் பெண் குழந்தைக்கு விஷம் வைத்து கொன்ற பாட்டி கைது செய்யப்பட்டார்.
தர்மபுரி மாவட்டம் காரிமங்கலத்தை அடுத்துள்ள கே.மோட்டூரை சேர்ந்தவர் ராஜா. இவரது மனைவி சந்திரா. இவர்களளின் ஒரே மகள் ஹேமாவுக்கும், அதே பகுதியை சேர்ந்த வேலு என்பவருக்கும், சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது.
இத் தம்பதிகளுக்கு இரண்டு வயதில் பெண் குழந்தை உள்ள நிலையில், மீண்டும் கர்ப்பமடைந்த ஹேமாவுக்கு கடந்த ஆண்டு இரண்டாவதாக மீண்டும் ஒரு பெண் குழந்தை பிறந்தது.

பிறந்த சில நாட்களில் அந்த குழந்தை மர்மமான முறையில் இறந்தது. இதுகுறித்து கிராம் நிர்வாக அலுவலர் கொடுத்த புகாரின் பேரில் காரிமங்கலம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து, இறந்த பெண் குழந்தையின் உடல் உறுப்புகளை ரசாயன ஆய்வுக்கு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் அந்த குழந்தை விஷம் கொடுத்து கொல்லப்பட்டது என்பது தெரியவந்தது. இதையடுத்து காரிமங்கலம் போலீஸார் ஹேமா குடும்பத்தினரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது, குடும்ப சூழ்நிலை காரணமாக குழந்தையை விஷம் கொடுத்து கொன்றதாக பாட்டி சந்திரா ஒத்துக்கொண்டார். இதை தொடர்ந்து, இன்ஸ்பெக்டர் பாஸ்கர்பாபு மற்றும் போலீஸார் சந்திராவை கைது செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications